(Reading time: 17 - 34 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

  

நாள்தோறும் சந்தியா காலத்தில் விளக்கேற்றி வைத்து விட்டு வழக்கமாகச் சொல்லும் தோத்திரம் ஒன்றை வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்த காமாட்சியம்மாள், அதை முடித்து விட்டுப் பதில் சொல்வதாகப் பாட்டியை நோக்கிச் சைகை செய்தாள். பாட்டி அந்தச் சைகை புரிந்து பாருவிடம் பேச்சுக் கொடுத்தாள். "குமார் இன்னும் காலேஜிலேருந்து வரலியாடி பாரு...? டவுன்லேருந்து ஒரு சாமான் விலை விசாரிச்சுண்டு வரச்சொல்லி அவனிட்டக் காலம்பரக் கேட்டுண்டேன்."

  

"இன்னும் வரலே பாட்டீ! அவன் வரத்துக்கு ஏழு ஏழரை மணியாகும்..."

  

இதற்குள் காமாட்சியம்மாள் தோத்திரத்தை முடித்து வணங்கிவிட்டுத் திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்த பாட்டிக்கு அருகே வந்து அமர்ந்தாள். பாட்டி மறுபடியும் தன் கேள்வியைத் தொடங்கினாள்.

  

"இந்த வருஷமாவது சீமையிலேருந்து பிள்ளை வரப் போறானோ இல்லியோ..?"

  

"வரதா அவன் எழுதியிருக்கானாம். 'வான்னு' சொல்லி இவரும் பதில் எழுதிப் போட்டிருக்காராம். வேணுமாமா பெண் வசந்தி சொன்னதா இப்போ தான் பாரு எங்கிட்டச் சொன்னாள். இவரா இதெல்லாம் எனக்கெங்கே சொல்றார் பாட்டி...?"

  

"வேணுகோபாலன் பொண் உன் பொண்ணிட்டச் சொல்லித்தான் உனக்கே அவன் வரான்கிறது தெரியறதாக்கும்!"

  

"ஆமாம் வேற யார் இதெல்லாம் எனக்குச் சொல்றா? இவருக்கோ நான் எதைக் கேட்டாலும் மூக்குக்கு மேலே கோபம் வந்துடறது."

  

வாசல் திண்ணையில் பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டியும் விசுவேசுவர சர்மாவின் மனைவி காமாட்சி அம்மாளும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி திண்ணையில் இருந்து தெருவுக்குக் கீழே இறங்கும் படிகளில் ஒன்றில் அமர்ந்து கொண்டிருந்தாள்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.