"இதுலே ஆச்சரியம்னு என்ன இருக்கு...?"
காமாட்சியம்மாளின் இந்தக் கேள்விக்கு நேரடியாக மறுமொழி கூறாமல் முத்து மீனாட்சிப் பாட்டி தெய்வ சிகாமணி நாடாரைப் பற்றி விவரிக்கத் தொடங்கினாள்.
எல்லாவற்றையும் கேட்டு விட்டுக் காமாட்சியம்மாள் சொன்னாள்:-
"நீங்க தான் இப்படியெல்லாம் சொல்றேள் பாட்டி! இவரானா அந்த மனுஷரைக் கொண்டாடாத நாள் கிடையாது..."
தெரு விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் புத்தகமும் கையுமாக இருபது வயது மதிக்கத்தக்க ஒல்லியான பையன் ஒருவன் அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
அதைப் பார்த்துவிட்டுப் பார்வதி குரல் கொடுத்தாள்.
"பாட்டி! குமார் வந்தாச்சு..."
குமார் படியேறி உள்ளே நுழைந்ததும் பாட்டியைப் பார்த்தவுடனே அவள் சொல்லியிருந்த தகவல் நினைவு வந்தவனாக, "பாட்டி! நீங்க சொன்ன மாதிரி சைஸிலே வெண்கல உருளியே இப்போ வரதில்லையாம். பாத்திரக் கடைக்காரன் சொன்னான். 'இது எவர்சில்வர் காலம். வெங்கலத்தையும் பித்தளையையும் தாமிரத்தையும் யாரும் விசாரிக்கிறதே இல்லே'ங்கிறான் அவன்" என்றான்.
"அவன் எதை வேணாச் சொல்லட்டும்டா குமார்! உங்கம்மாகிட்டக் கேட்டுப் பாரேன். நல்ல பால் வெங்கலத்திலே வார்த்த குண்டு அருக்கே, அதுலே பருப்பு வேகவச்சால் வர்ற ருசி 'எவர்சில்வர்லே' வருமா கேளு...!"
"வருமோ வராதோ பாட்டீ... அவன் சொன்னதை உங்ககிட்டச் சொன்னேன்."