(Reading time: 17 - 34 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

"காப்பியோட நிறுத்திக்குங்கோ... ஒண்ணொண்ணாக் கெடுத்துக்காதீங்கோ..." என்று அவள் அவரிடமே கேலி செய்யத் தவறுவதில்லை.

  

அதிகாலை இருள் பிரிந்தும் பிரியாமலும் இருக்கிற வைகறை வேளையில் நீராடிய ஈரக் கூந்தலும், திலகம் துலங்கும் பொன்நிற நெற்றியுமாக மல்லிகையும் சாம்பிராணியும் கற்பூரமும் துளசியும் மடிப்பாலும் தசாங்கமும் கமகமவென்று மணக்க அம்மா எதிரே தென்படும் போது சாட்சாத் ராஜ ராஜேஸ்வரியே வீட்டுக்குள் வந்து நிற்பது போல் ரவிக்குத் தோன்றும்.

  

அம்மாவின் ஆசார அநுஷ்டானங்கள் அசௌகரியமாக மற்றவர்களைச் சிரமப்படுத்தியபோது கூட அவை மங்கலமான-தவிர்க்க முடியாத அசௌகரியங்களாகத் தான் அவனுக்கும் மற்றவர்களுக்கும் தோன்றியிருக்கின்றன. அம்மா தோன்றி வளர்ந்து வந்த குடும்பம் அப்படிப்பட்டதென்று அவன் அறிவான்.

  

அதே அகஸ்திய நதி தீரத்தில் சங்கரமங்கலத்திலிருந்து சில மைல் தொலைவிலிருந்த பிரம்மபுரத்தில் ஒரு வைதிகமான குடும்பத்தில் கனபாடிகள் ஒருத்தரின் ஒரே மகளாகத் தோன்றிய பெண் வேறு எப்படி இருக்க முடியும்? அப்பா அளவிற்கு இல்லையென்றாலும் அம்மாவுக்கும் போதுமான அளவு சாஸ்திரஞானம், சமஸ்கிருத ஞானம், தமிழ்த் தோத்திரப் பாடல்களில் ஞானம் எல்லாம் உண்டு. தன் இளமையில் ஊரில் இருந்தபோது, அம்மாவின் ஆசாரங்களால் விளையும் அசௌகரியங்களுக்கு 'ஹோலி - இன்கன்வீனியன்ஸ் - ஆசார அசௌகரியங்கள்' என்று செல்லமாக ஒரு பெயரே சூட்டியிருந்தான் ரவி. வீடே அந்த அசௌகரியங்களில் சிறைப்பட்டிருந்தது. ஆனாலும் அதிலிருந்து விடுபட விரும்பாமல் அதை அப்படியே தொடர விரும்பியது.

  

ரவியின் கடிதத்தை வீட்டில் யாரும் அறிய விடாமல் சர்மா தடுத்தது காமாட்சியம்மாளுக்குப் பயந்துதான். ரவி ஒரு பிரெஞ்சு யுவதியைக் காதலிக்கிறான் என்ற உண்மை தனக்கும் முன்னதாக ஏற்கெனவே எந்த இரண்டு பேருக்குத் தெரியுமோ, அந்த இரண்டு பேருக்கு மட்டுமே அவராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கும் மேலாக அந்தப் பிரெஞ்சு யுவதியுடன் அவன் சங்கரமங்கலத்துக்குப் புறப்பட்டு வரப் போகிறான் என்பதை அவர் வேறு யாருக்கும் தெரிவிக்கத் தயங்கினார்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.