(Reading time: 17 - 34 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

இதில் அவருக்குப் பல தர்ம சங்கடங்கள் இருந்தன. வேணு மாமாவும், வசந்தியும், ரவியையும் அவனுடைய பிரெஞ்சுக் காதலியையும் தங்களோடு தங்க வைத்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தாலும் கூடச் சொந்த ஊரில் சொந்த வீடு இருக்கும்போது... ஏதோ ஓர் அந்நிய நாட்டு யுவதியுடன் வருகிறான் என்ற ஒரே காரணத்துக்காக ரவியை மற்றொருவர் வீட்டில் தங்க வைப்பது எப்படி நியாயமாயிருக்கும் என்றெண்ணி அவர் மனம் தயங்கியது.

  

சற்றே லௌகீகமாகவும் கூட இந்த விஷயத்தில் அவர் யோசித்தார். அவன் மேல் உயிரையே வைத்திருக்கிற அந்தப் பெண்தான் அவனைப்பற்றி என்ன நினைப்பாள்? இன்னொருவர் வீட்டில் தங்கிக்கொள்ளக் காரணமென்று அவன் தான் அந்தப் பெண்ணிடம் எதைச் சொல்ல முடியும்? 'உங்கள் நாட்டில் காதல் செய்வது இவ்வளவு பெரிய, தண்டனைக்குரிய காரியமா? ' என்று அவள் அவனைத் திருப்பிக் கேட்டால் அவன் என்ன பதில் சொல்லுவான்? என் வீட்டில் நான் தங்குவதற்குப் போதுமான வசதிகள் இல்லை. அதனால் இங்கே தங்க நேர்ந்தது என்று அவன் சொல்ல உன் வீட்டின் வசதியின்மையே எனக்குப் போதும். அங்கு போகலாம்' என்று அவள் பதில் கூறிவிட்டால் என்ன செய்வது? தூர தேசத்துக்குப் போய்விட்டுப் பல வருஷங்களுக்குப் பின் ஊர் திரும்புகிற பிள்ளையை இத்தனை தயக்கங்களோடும் வரவேற்க நேர்கிறதே என்று மனம் குழம்பினார் அவர். அவன் ஊருக்கு வருவதை ஒரு மாதம் தள்ளிப்போட்டால் கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவுக்கு வரலாமே என்று அவருக்குத் தோன்றியது. அதனால் தான் வேணு மாமாவைப் பார்த்து விட்டு வீடு திரும்பியதுமே 'அந்த ஏரோகிராமைத் தபாலில் போட வேண்டாம்' என்று தன் பெண் பார்வதியிடம் வசந்திக்கு அவசர அவசரமாகச் சொல்லி அனுப்பிவிட்டுப் பூமிநாதபுரம் புறப்பட்டிருந்தார் சர்மா.

  

பூமிநாதபுரத்திற்குச் சென்ற போதும், அங்கு இருந்த போதும் இரவு நேரங்கழித்துத் திரும்பிய போதும் சர்மாவுக்குத் தாம் ரவிக்கு எழுதிய கடிதத்தின் தொடர்பான சிந்தனைதான். அவர் இரவு வீடு திரும்பிய போது பார்வதி தூங்கிப் போயிருந்தாள். காலையில் அவர் அகஸ்திய நதியில் நீராடி வீரு திரும்பிப் பூஜை புனஸ்காரங்களை முடித்துக் காப்பி மேடையை அணுகிய போது பார்வதி அந்த விவரங்களைத் தந்தையிடம் தெரிவித்தாள்.

  

"அப்பா! நான் ஓடிப்போய்ச் சொல்றதுக்குள்ளே வசந்தி அக்கா அந்த லெட்டரைப் போஸ்ட் பண்ணிட்டா. அப்புறம் நீங்க பூமிநாதபுரம் போயிருந்தப்போ இறைமணி முடி உங்களைத் தேடிண்டு வந்தார். இன்னிக்குக் காலம்பர மறுபடி வரேன்னார்..."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.