"அது சரிடா கொழந்தே! தினம் ஏன் இத்தனை நாழியாறது....? காலேஜ் நாலு மணிக்கே விட்டுடமாட்டாளோ...! புது நகரத்திலேயிருந்து சங்கரமங்கலத்துக்கு ரெயில் வந்து சேர மூணு மணி நேரமா ஆறது..."
"புது நகரம் டூ சங்கரமங்கலம் முழுசா இருபது மைல் கூட இல்லே பாட்டி! பத்தொம்பது மைல்தான். ஆனா இந்தப் பத்தொம்பது மைல்லே முப்பத்தொம்பது ஊர் சிறிசும் பெரிசுமா இருக்கு. நாலு ஊருக்குத்தான் ரயில்வே ஸ்டெஷன் போட்டிருக்கா. சட்டப்படி ரயில் அங்க மட்டும்தான் நிக்கணும். ஆனா, எல்லா ஊர்லேருந்தும் புதுநகரம் காலேஜூக்குப் பையன்கள் வந்து திரும்பறதுகள் அங்கங்கே செயினைப் பிடிச்சு இழுத்து ரெயிலை நிறுத்தி இறங்கதுங்கறது வழக்கமாப் போச்சு. காலம்பர இங்கேயிருந்து காலேஜூக்குப் போற ரெயில்லேயும் இதே தொல்லை. சாயங்காலம் திரும்பற ரயில்லேயும் இதே தொல்லை பாட்டீ!"
பாட்டிக்கு விவரம் சொல்லிவிட்டு உள்ளே சென்ற குமாரைப் பின் தொடர்ந்து பார்வதியும் வீட்டின் உள்ளே சென்றாள்.
"அப்பா இல்லையாடீ பாரு..."
"அப்பா பூமிநாதபுரம் போயிருக்கா... அது சரி... ரவி அண்ணா வரப்போறதா, அப்பா பாரிஸுக்கு லெட்டர் எழுதியிருக்கா... உனக்குத் தெரியுமோ...?"
"தெரியாது... எப்போ வரானாம்...?'
"எப்போன்னு சரியாத் தெரியாது... ஆனா ரவியண்ணா வரப் போறது நிச்சயமாக்கும்..."
சொல்லியபடியே கூடத்து மேடையிலிருந்த ஸ்டவ்வைப் பற்ற வைத்துக் காப்பி கலப்பதற்காகப் பாலைச் சுட வைத்தாள் பார்வதி. டிகாக்ஷன் ஏற்கெனவே போடப்பட்டு ஃபில்டரில் தயாராயிருந்தது.
அந்த வீட்டில் சமையலறைக்குள் காப்பி, டீ கலந்து சாப்பிட அநுமதி இல்லை. காப்பி, டீ சாப்பிடுகிறவர்கள் சர்மாவும் குமாரும் பார்வதியும் தான். வீட்டுக் கூடத்தில் அவர்கள் காப்பி, டீ