(Reading time: 17 - 34 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

கிழக்கு மேற்காக நீண்டிருந்த தெருவின் மேற்குப் பக்கமிருந்து கட்டை குட்டையாக ஓர் இரட்டை நாடியுள்ள மனிதர் வந்து கொண்டிருந்தார். இடுப்பில் நாலு முழம் வேஷ்டி, கறுப்பு நிறத்தில் அரைக்கைச் சட்டை மேலே ஒரு சிறு துண்டு அணிந்த தோற்றத்தில், நீண்ட வெட்டரிவாள் மீசையுடன் அந்த நடுத்தர வயது மனிதர் வீட்டு வாசலில் வந்து நின்றதும் பார்வதி தயங்கித் தயங்கிப் படியிலிருந்து மெல்ல எழுந்திருந்தாள்.

  

"ஐயா இருக்காரா பாப்பா...?"

  

"இல்லையே...? பூமிநாதபுரம் போயிருக்கார். திரும்பி வர நாழியாகும்."

  

"சரி பரவாயில்லை. அவரு திரும்பி வந்ததும் ஞாபகமா 'இறைமுடிமணி' தேடி வந்தார்ன்னு சொல்லு, மறுபடி நாளைக்கிக் காலையிலே வந்து பார்க்கிறேன்..."

  

வந்தவர் போய்விட்டார். பார்வதியிடம் யாரோ பேசும் குரலைக் கேட்டுத் தலைப்பை இழுத்து நன்றாகப் போர்த்திக் கொண்டு எட்டிப் பார்த்த காமாட்சியம்மாளிடம்,

  

"அப்பாவைத் தேடி வந்துட்டுப் போறார்... மறுபடி காலம்பர வராறாம்...?" - என்றாள் பார்வதி.

  

"யாருடீது...? வெறகுக் கடைத் தேசிகாமணிநாடார் குரல் மாதிரின்னா கேட்டுது" என்று இருந்த இடத்திலிருந்தபடியே நீட்டி முழக்கி வினவினாள் முத்து மீனாட்சிப் பாட்டி.

  

காமாட்சியம்மாள் பார்வதியை விசாரித்துத் தெரிந்து கொண்டபின், "ஆமாம் பாட்டி! நீங்க சொன்னவர்தான். இவரைத் தேடி வந்துட்டுப் போறார்..." என்று பாட்டிக்குப் பதில் சொன்னாள்.

  

"தேசிகாமணி நாடார்தானா? அவனுக்கு விசுவேசுவரன் கிட்ட என்னடீ காரியம் இருக்கும்...?"

  

"என்ன காரியம்னு தெரியலே, எப்பவாவது இப்படி இவரைத் தேடிண்டு வரது உண்டு. இவரும் அவரைத் தேடிப் போறதுதான்!"

  

"என்ன ஆச்சரியம்டீ இது?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.