போட்டுக் கொள்வதற்காகத் தனி ஸ்டவ் மேடை இருந்தது. அதையும் அவர்களே தான் போட்டுக் கொள்ள வேண்டும். ஸ்டவ் - போன்ற மண்ணெண்ணெய் அடுப்புக்கள் சமையலறைக்குள் நுழையக்கூடாது. அடுப்பாகவும், கொடியடுப்பாகவும் பிரிக்கப்பட்டிருந்த புராதனமான மண் அடுப்பு மட்டுமே சமையலறை மேடையில் இருந்தது. அந்த மண் அடுப்பு அதன் சுற்றுப்புறச் சூழல், எல்லாவற்றையுமே ஒரு கோயில் கர்ப்பக்கிருகம் போலச் சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தாள் காமாட்சி அம்மாள். கோயில் கர்ப்பக்கிருகத்துக்குள் கண்டிப்பான அனுமதி நிபந்தனைகளும், சேர்க்கக் கூடியவை - சேர்க்கக் கூடாதவை என்ற விதிகளும் இருப்பது போல அந்த வீட்டின் புராதனமான சமையலறைக்குள் விதிகள் ஆசார அநுஷ்டானங்கள் எல்லாம் இருந்தன. நேமநிஷ்டை தவறாத ஒரு முனிவரின் ஆசிரமத்தில் தங்க வந்தவர்கள் போல் மற்றவர்கள் அந்த வீட்டில் பழக வேண்டியிருந்தது.
நீண்ட காலம் வரை சர்மாவும் காப்பி, தேநீர் எதுவும் அருந்தாமல்தான் இருந்தார். அவர் காப்பி சாப்பிடத் தொடங்கிச் சில ஆண்டுகளே ஆகின்றன. ஆனால், அவருக்காகக்கூட அந்த வீட்டின் ஆசாரத்தையும், சமையலறை நிபந்தனைகளையும் காமாட்சி அம்மாள் தளர்த்தவில்லை. அவரையும், அவருடைய காப்பிப் பழக்கத்தையும் கூடத்து மேடையோடு தடுத்து நிறுத்திவிட்டாள்.
ரவியே பாரிஸ் போகுமுன் சென்னையில் வேலையாக இருந்தபோது ஒரு தடவை விடுமுறைக்குச் சங்கரமங்கலம் வந்திருந்த சமயத்தில், "அம்மா, விடிஞ்சு எந்திருந்தா கோபூஜை, துளசி பூஜை, விளக்கு பூஜைன்னு வீட்டையே கோயிலாக்கிட்டே நீ... இனிமே, நாங்கள்ளாம் வேற வீடு பார்த்துண்டு போயிட வேண்டியதுதான்..." என்று சிரித்துக் கொண்டே காமாட்சியம்மாளிடம் சொல்லியிருக்கிறான்.
'இங்கே நிற்காதே, அங்கே நிற்காதே, அதைத் தொடாதே... இதைத் தொடாதே', என்று அம்மா பண்ணுகிற கெடுபிடிகளில் சலிப்படைந்து அப்படிச் சொல்லியிருந்தானே ஒழிய உள்ளுற அவனுக்கும் அந்த வீட்டின் மற்ற உறுப்பினர்களுக்கும் காமாட்சியம்மாளின் ஆசார அனுஷ்யானங்களில் பெருமைதான். அந்த அம்மாளின் சத்திய விசுவாசத்தையும் இனிய கொள்கை முரண்பாடுகளையும் அவர்கள் மதித்திருக்கிறார்கள். சொல்லப் போனால் சர்மாவே பல விஷயங்களில் ஆசார அநுஷ்டானங்களைத் தீவிரமாகப் பற்றிக் கொண்டிருந்ததற்குக் காமாட்சியம்மாள் தான் மிகப்பெரிய தூண்டுதல்.