"வடக்குத் தெரு கோடியிலே இருக்கே ஒரு காலி மனை; அதுலே என் மருமகன் - அதாம்பா... மூத்த மகளோட புருசன் - குருசாமி பலசரக்குக் கடை போடணும்கிறான். விசாரிச்சதிலே அந்த இடம் உன் மடத்துக்குச் சொந்தமானதுன்னு தகவல் தெரிஞ்சுது. முடியுமானா அந்த இடத்தை ஒரு நியாயமான வாடகைக்குப் பேசி விட்டால் நல்லது. இதை உங்கிட்டக் கேட்டுட்டுப் போகலாம்னுதான் வந்தேன்..."
"அந்த இடத்தை வாடகைக்கு விடலாம்னு நானாத் தீர்மானம் பண்ணிட முடியாது. ஸ்ரீ மடத்துக்கு ஒரு வார்த்தை எழுதிக் கேட்டுண்டு அப்பறமா உனக்குச் சொல்றேன்..."
"எழுதப் போறதைக் காலதாமதம் பண்ணாமே கொஞ்சம் சீக்கிரமா எழுதேன்."
"இதோ இன்னிக்கே எழுதிடறேம்ப்பா."
"அப்ப நான் வரட்டா?"
"கொஞ்சம் இரு தேசிகாமணீ? உங்கிட்ட ஒரு யோசனை கேட்கணும்."
இறைமுடிமணி புறப்படுவதற்காக எழுந்திருந்தவர் மறுபடி திண்ணையில் உட்கார்ந்தார். குரலைத் தணித்துக் கொண்டு ரவியின் கடிதம், தன் பதில் எல்லாவற்றையும் விவரித்துக் கூறினார் சர்மா. பின்பு இறைமுடிமணியிடமே அபிப்பிராயம் கேட்டார்.
"என் நெருங்கின சிநேகிதன்கிற முறையிலே இதில் உன் யோசனை என்ன தேசிகாமணி?"
"உன் மகன் தப்பா எதுவும் பண்ணிடலே. திருமணத்துக்குத் தக்க பருவம் வந்துவிட்ட இளைஞன் ஒருவனுக்கு அவன் பெற்றோர் திருமண ஏற்பாட்டை உரிய காலத்தில் செய்யத் தவறிவிட்டால் அந்த இளைஞன் தானே, தனக்குரிய மணமகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது நியாயமானதே என்று அஷ்டாதச தர்ம சாஸ்திரத்தில் ஒன்றாகிய யாக்ஞவல்கியத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே ஞாபகமில்லையா?"