அவாளை ஸ்டேஷன்லேருந்து அழைச்சிண்டு வந்து விட்டுட்டு எனக்குப் பூமிநாதபுரத்துலே ஒரு கல்யாணத்துக்குப் போகணும்" என்றார் வேணு மாமா.
சர்மா சொன்னார்: "நல்ல வேளையாக இந்த மாச முதல் தேதியிலிருந்து ரயில் காலம்பர் அஞ்சே முக்கால் மணிக்கு வரது. முன்னாடி எல்லாம் மூணே முக்கால் மணிக்கோ நாலு மணிக்கோ வந்துண்டிருந்தது. போக வர ரொம்ப அசௌகரியமாயிருந்தது."
"மாமி, குமார், பார்வதி எல்லாரும் ஸ்டேஷனுக்கு நம்மோட வராளோல்லியோ?"
"குமாரும் பார்வதியும் வரா. அவ தான் வராளோ இல்லியோ, தெரியலே. வெள்ளிக்கிழமை வேறே. அவளுக்கு ஏகப்பட்ட பூஜை புனஸ்காரம்லாம் இருக்கும்."
"ஒரு நாளைக்கு அந்தப் பூஜை புனஸ்காரத்தை எல்லாம் சீக்கிரமா முடிச்சிட்டு வரட்டுமே...? தூர தேசத்திலேருந்து இத்தனை வருஷத்துக்கப்புறம் பிள்ளை வரபோது அம்மா ஸ்டேஷனுக்கு வந்து வரவேற்க வேண்டாமோ?"
"நான் சொல்லிப் பார்க்கிறேன். ஆனா அவ வரது சந்தேகம்னு படறது எனக்கு."
"நீர் பேசாம இரும். நான் காலம்பர நாலு மணிக்கு வசந்தியைக் காரிலே அனுப்பி மாமியைச் சரிகட்டறேன்."
இவை ரவி சங்கரமங்கலம் வருவதற்கு முந்திய தினத்தன்று இரவு வேணு மாமாவும் சர்மாவும் பேசிக் கொண்டவை.
மறுநாள் அதிகாலையில் சர்மா நாலு நாலரை மணிக்கே தயாராகி விட்டார். கிராமத்தில் அங்கங்கே கலியாண முகூர்த்தங்கள் இருந்ததால் நாதஸ்வர இன்னிசையும் வைகறையின் குளிர்ந்த காற்றும் மேற்கே மலையில் சாரல் பிடித்திருந்ததால் பன்னீர் தெளிப்பது போல் பெய்து கொண்டிருந்த பூந்தூற்றலுமாக இருந்தது அந்தக் காலை வேளை. காமாட்சியம்மாளை ரெயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போக வசந்தி காருடன் வந்து முயற்சி செய்தும் பலிக்கவில்லை.