"தர்மமா இல்லையான்னு உன்னை நான் கேட்கலே. நடைமுறையில் உள்ள சாத்திய அசாத்தியங்களைப் பற்றித்தான் இப்ப உன்னைக் கேட்கிறேன்."
"சாத்தியமா அசாத்தியமான்னு யோசிச்சுத் தயங்கிக்கிட்டிருக்கிறதை விடச் சாத்தியமாகிறாப்பலே செய்துக்க வேண்டியது தான். என்னைப் பொறுத்த வரை இத்தகைய கலப்பு உறவுகளை வரவேற்கிறேன்." - மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு இறைமுடிமணி புறப்பட்டுப் போய் விட்டார்.
சர்மா யோசனை கேட்ட விஷயத்தில் சர்மாவுக்கு எது முடியும் எது முடியாது என்று எண்ணிப் பார்த்து யோசனை சொல்லாமல் ஒரு சுயமரியாதைக்காரர் என்ற முறையில் தன்னுடைய கொள்கைப் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காமல் பதில் சொல்லிவிட்டுப் போயிருந்தார் இறைமுடிமணி. நாத்திகரான இறைமுடிமணி யாக்ஞவல்கியத்தை மேற்கோள் காட்டிப் பேசியது பற்றிச் சர்மா ஒரு சிறிதும் ஆச்சரியப்படாததற்குக் காரணமிருந்தது.
இறைமுடிமணி ஓர் ஆச்சரியகரமான மனிதராயிருந்தார். சிறு வயதில் ஒரு சுயமரியாதைப் பிரசங்கத்தில் தாக்கிப் பேசுகின்ற நோக்குடன் ஒரு புராணக் கதையைத் தவறாகவும் சிறிது மாற்றியும் சொல்லியதற்காக 'ஒன்றை அரைகுறையாகவும் தப்பாகவும் தெரிந்து கொள்வது தான் சுயமரியாதைக்காரருக்கு இலட்சணம் போலும்' என்று எதிர்த் தரப்புப் பத்திரிகையில் அவரைத் தாக்கி எழுதியிருந்தார்கள். உடனே ஒரு முரண்டுடன் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் இருந்த புராணங்களையும், காப்பியங்களையும், நீதி நூல்களையும், தரும சாஸ்திரங்களையும், தக்கவர்கள் துணையோடு ஒன்று விடாமல் படிக்கத் தொடங்கினார் அவர். இறைமுடிமணியின் அந்த நேர்மை பலரைக் கவர்ந்தது. ஒன்றைக் கண்டித்தும், தாக்கியும் பேசுவது என்றால் கூட அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று உணர்ந்த அவரது நாணயம் அவர் சார்ந்திருந்த இயக்கத்துக்கே ஒரு மதிப்பை உண்டாக்கியது என்றுதான் சொல்லவேண்டும். இதனால் சங்கரமங்கலத்திலும் சுற்றுப்புறத்து ஊர்களிலும் புராண இதிகாச தர்மசாஸ்திரங்களில் எதிலும் நுணுக்கமான எந்த மூலையில் உள்ள எந்தக் கருத்தை விசாரிப்பது என்றாலும் ஒன்று பரம ஆத்திகராகிய சர்மாவை விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது பரம நாத்திகராகிய இறைமுடிமணியை விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.