எழுதவில்லை. ஒரு வேளை அவனே வேணு மாமா வீட்டில் தங்கிக் கொள்கிற எண்ணத்தில் தான் அதெல்லாம் எழுதாமல் இருக்கிறானோ என்று கூட அவருக்கு ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. அவனுடைய வருகையைச் சில நாட்கள் தள்ளிப் போடச் சொல்லி எழுதவும் இனிமேல் முடியாது. அவர் ஏற்கெனவே வரச் சொல்லி எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தை வேணு மாமாவின் பெண் வசந்தி தபாலில் சேர்த்து விட்டாள்.
இதுவரை இந்தப் பிரச்னையை அவர் யார் யாரிடம் கலந்தாலோசித்திருந்தாரோ அவர்கள் அத்தனை பேரும் ரவியின் மேல் அநுதாபத்தோடு தான் பதில் சொல்லியிருந்தார்கள். 'தனியிடம், குளியலறை இணைப்பு இவற்றை எல்லாம் ரவி கடிதத்தில் எழுதி வேண்டிக் கொண்ட பின்பு தான் செய்ய வேண்டுமா என்ன? அவன் கேட்காவிட்டாலும் நாமாகவே ஏற்பாடு செய்ய வேண்டியது தானே?" - என்று கூட ஒரு சமயம் இவர் மனத்தில் தோன்றியது. 'நாமாவது கொஞ்சம் வளைந்து நெளிந்து கொடுத்து அநுசரித்து போய் விடலாம். ஆசார அனுஷ்டானங்களில் பிடிவாதமுள்ள அவள் பாடுதான் சிரமம். இவளுக்குப் பதில் சொல்லி விளக்கிக் கொண்டிருப்பது தான் முடியாத காரியம்' என்று தம் மனைவியைப் பற்றி எண்ணித் தயங்கினார் சர்மா. ரவியும் அவனோடு அந்தப் பிரெஞ்சுப் பெண்ணும் சங்கரமங்கலத்துக்கு வந்து சேருவதற்குள்ளாவது தம் மனைவிக்கு விவரத்தைச் சொல்லியாக வேண்டுமென்று நினைத்திருந்தார் அவர். இப்போதே காமாட்சியிடம் அதைச் சொன்னால் அவள் தற்செயலாகவோ அல்லது வாய்தவறியோ பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டியிடம் பிரஸ்தாபிப்பாள். முத்து மீனாட்சிப் பாட்டி உடனே ஊரெல்லாம் தமுக்கடித்தாற்போல் அதைப் பரப்பிவிடுவாள் என்று பயந்தார் அவர்.
நீண்ட சிந்தனைக்குப்பின் மகன் ஊர் வந்து சேருவதற்குள் செய்யவேண்டிய ஏற்பாடுகளைப்பற்றி ஒரு வழியாக அவர் ஒரு தீர்மானத்துக்கு வந்து சேர்ந்தார். அவருடைய அந்த வீட்டுக்கு இரண்டு வாசல்கள் இருந்தன. பக்கவாட்டில் பசுமாடுகள் தொழுவத்துக்குப்போக ஒரு வாசல் பயன்பட்டு வந்தது. தொழுவத்துக்கு அப்பால் பத்து பன்னிரண்டு தென்னைமரங்கள், நாலைந்து மா, பலா மரங்கள், பூஞ்செடி கொடிகள் அடங்கிய தோட்டமும் ஓர் இறவைக் கிணறும் வீட்டை ஒட்டினாற்போல் இருந்தன. தோட்டத்துக்கும் மாட்டுத் தொழுவத்துக்கும் வேலையாட்கள் வரப்போக அந்தப் பக்கவாட்டிலிருந்த வாசல் பயன்பட்டு வந்தது. வீட்டுத் கொல்லையிலிருந்தே தோட்டத்திற்கும் மாட்டுத் தொழுவத்திற்கும் போகலாம் என்றாலும் வெளி ஆட்கள் வரப்போகப் பயன்படுகிற வரையில் தனி வாசல் இருந்தது. இந்த தனி வாசலில் வந்து சேருகிற விதத்தில் மாடியிலிருந்து தோதாகப் படிகள் இருந்தன. மாடியில்