மரப்பலகையாலேயே அறை மாதிரித் தடுத்து மேலே ஒரு ஸீலிங் ஃபேனும் போட்டுக் கொடுத்துவிட்டு பக்கத்து ஹாலில் அதை ஒட்டினாற் போலேயே சில நாற்காலிகள், டைனிங் டேபிள்-தேடி வருகிறவர்களைப் பார்க்கிற வசதி எல்லாம் செய்து கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு இப்போது வந்திருந்தார் சர்மா.
வேறு விதமான தயக்கங்கள், தர்மசங்கடங்கள் எல்லாம் இருந்த போதிலும் மகன் மேல் உயிர் நட்புக்கொண்டு அவனை நம்பி வருகிற ஒரு கோடீஸ்வரன் வீட்டுப் பெண்ணைச் சாதாரணத் தேவைகளுக்குத் தவித்துக் கஷ்டப்பட விடக்கூடாது என்று உறுதியாக நினைத்தார் அவர். 'சர்மாவுக்கு இப்போ செலவு மிச்சம். அவாளை இங்கேயே தங்க வச்சுடலாம்' - என்று முதல்நாள் வேணு மாமா சொல்லியிருந்த வார்த்தைகள் வேறு சர்மாவின் ரோஷத்தைக் கிளறி விட்டிருந்தன. 'நான் ஏதோ செலவு செய்யறத்துக்குத் தயங்கற மாதிரி அவர் சொல்லிக் காமிச்சுட்டாரே?" - என்று எண்ணி வருந்தினார் சர்மா. அன்று ஏதோ ஒரு வடக்கத்திப் பண்டிகைக்காகத் தபாலாபீஸ் - பாங்கு - எல்லாம் விடுமுறையாயிருந்தன. நினைத்த உடனே கொத்தனாருக்கும் மரவேலை செய்கிற மேஸ்திரிக்கும் சொல்லி அனுப்பினார் சர்மா. பாங்கை எதிர்பார்க்காமல் உடனடிச் செலவுக்குப் போதுமான ரொக்கம் கொஞ்சம் அவர் கையிலிருந்தது. எப்போதோ மலிவாக வருகிறதென்று வாங்கிப் போட்ட தேக்குமரம் வேண்டியமட்டும் வீட்டிலேயே இருந்தது அப்போது வசதியாகப் போயிற்று. அந்த ஊரைச் சுற்றி மலைப் பகுதியில் தேக்குமரம் அதிகம்.
பிற்பகலில் தச்சனும், கொத்தனாரும் வந்து அளவுகள் எடுப்பதைப் பார்த்த பின்புதான் காமாட்சியம்மாள் மெல்ல அவரை விசாரித்தாள்: "என்ன பண்ணப் போறேள்? கட்டிட வேலைக்காராளும் மர வேலைக்காராளும் வந்திருக்காளே?"
"பிள்ளையாண்டான் பாரிஸிலேருந்து வரப் போறானே; அவன் தங்கிக் கொள்ள வசதியா இருக்கட்டுமேன்னு மாடியிலே ஒரு தனி ரூம் போடச் சொல்லியிருக்கேன்" என்று சர்வ ஜாக்கிரதையாக ரவி வருவதாக மட்டும் அவளிடம் சொன்னார் சர்மா.
சாயங்காலம் தற்செயலாக அங்கே வந்த வேணுமாமாவும் அந்த ஏற்பாடுகளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சர்மாவைப் பாராட்டினார்.
"அடேடே! பரவாயில்லையே! தனியா ஒரு ரூம் போடணும்னு நான் சொன்னப்போ வேண்டா