(Reading time: 17 - 33 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

விரும்பும் அக்கறையும் அவகாசமும் உள்ளது. கிராமங்களின் இந்த ஆவலுக்குச் சலிப்பே கிடையாது.

  

சங்கரமங்கலம் இரயில் நிலையத்திலேயே அது தெரிந்தது. சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக அந்த இரயில் நிலையத்தில் 'போளி, ஆமவடை', என்று ஒரு சீரான குரலில் கூவி விற்று வரும் சுப்பாராவ், நியூஸ் பேப்பர் கன்னையா, பழக்கடை வரதன் ஆகியவர்களும் பிறரும் அவர்களைச் சுற்றிக் கூடிய அந்தக் கும்பலில் இருந்தார்கள். அந்தப் பாதையின் வழக்கமான இரயில் பயணி ஒருவர் கண்ணை மூடியபடி இரயிலுக்குள் இருந்தே 'போளி ஆமவடை, போளி ஆமவடை' என்று குரலைக் கேட்டே அது எந்த ஸ்டேஷன் என்று கண்டுபிடித்துவிடுகிற அளவுக்கு ஒரு கால் நூற்றாண்டுக் காலமாக அங்கே ஒன்றிப் போயிருந்தார் சுப்பாராவ்.

  

அத்தனை பேர்களுக்கு நடுவே, "என்ன சுப்பாராவ் சௌக்கியந்தானே?" என்று மறக்காமல் ஞாபகமாக ரவி தன்னை நலம் விசாரித்ததில் சுப்பாராவுக்குத் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. சுப்பாராவின் வெற்றிலைக் காவி படிந்த சிரிப்பு அதை வெளிப்படுத்தியது.

  

ஸ்டேஷனிலிருந்து வீடு திரும்பும்போது வேண்டுமென்றே கமலியும், ரவியும், சர்மாவும் பின்னால் ஒரு காரில் தனியே வரும்படியாகச் செய்துவிட்டு வேணு மாமாவும், வசந்தியும், குமாரையும், பார்வதியையும் தங்களோடு அழைத்துக் கொண்டு முன்னால் புறப்பட்டு மற்றொரு காரில் வீடு திரும்பியிருந்தனர். வசந்தியையும், குமாரையும் பார்வதியையும் இறக்கிவிட்டு விட்டு வேணு மாமா அதே காரில் அப்படியே பூமிநாதபுரம் போய்விட்டார். வீட்டு வாசலில் சாதாரணமான மாக்கோலம் தான் போடப்பட்டிருந்தது. வசந்தி அதைக் கவனித்துவிட்டு, "உள்ளே போய்க் கொஞ்சம் செம்மண் கரைச்சுண்டு வாடி பாரூ! அவசரமா ஒரு செம்மண் கோலம் போடு, அப்புறம் தாம்பாளத்திலே கொஞ்சம் ஆரத்தி கரைச்சுத் திண்ணையிலே தயாரா வச்சுக்கோ... பின்னாடியே அவா கார் வந்துடும். அவாளைத் தெருவிலே காக்க வச்சுடாதே" - என்று பார்வதியைத் துரிதப்படுத்தினாள். ஏதோ வெளியூரில் கலியாணமாகி வீட்டுக்கு வருகிற பெண் மாப்பிள்ளையை வரவேற்கிறவள் போன்ற உற்சாகத்திலும் உல்லாசத்திலும் திளைத்திருந்தாள். காமாட்சி மாமி கோபித்துக் கொண்டுவிடப் போகிறாளோ என்ற பயமும் இருந்தது. வசந்தியின் செயல்களில் எல்லாம் கமலியின் மேலும் ரவியின் மேலும் அவளுக்கு இருந்த அளவு கடந்த பிரியம் தெரிந்தது. அவர்கள் காதலை அவள் மனப் பூர்வமாக விரும்பி ஆதரிப்பதும் தெரிந்தது.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.