பண்ணிக்க அவளால் முடியும்..."
"இருந்தாலும் முறை - மரியாதை - நாகரிகம்னு இருக்கே? என்னாலே முடிஞ்சதைப் பண்ணினேன். வேணு மாமாவும் வசந்தியும் கூடச் சில யோசனைகள் சொன்னா."
மாடி அறை முகப்பிலே சர்மா புதிதாகச் செய்து போட்டிருந்த நாற்காலிகளில் அப்போது எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
"அப்பா உங்கிட்டச் சொல்லச் சொன்னார் ரவி. பூமிநாதபுரத்திலே ஒரு கலியாண முகூர்த்தத்துக்குப் போயிருக்கார். மத்தியானம் வந்திடுவார். நீ புறப்படறத்துக்கு முன்னே சுரேஷைப் பார்த்தியா? ஏதாவது சொன்னானா?"
"பார்க்கலே! ஆனா யுனெஸ்கோ ஆபிஸூக்கு ஃபோன் பண்ணினேன். சுரேஷ் ஜெனீவா போயிருக்கிறதா சொன்னா. திரும்பி வர ஒரு வாரத்துக்கு மேலே ஆகும்னு தெரிஞ்சுது."
பார்வதி புதிதாக வாங்கியிருந்த ட்ரேயில் புதிதாக வாங்கியிருந்த பீங்கான் கிண்ணங்களில் காபியோடு வந்தாள். அப்பா சிரமப்பட்டு அந்த வீட்டில் ஒவ்வொன்றாகப் புதிய பண்டங்களைச் சேகரித்திருப்பது ரவிக்குப் புரிந்தது. கோப்பைகள், பீங்கான் கிண்ணங்கள் வழக்கமாக அந்த வீட்டில் இருந்ததில்லை. கண்ணாடி கிளாஸ் கூட அவனுக்குத் தெரிந்து அங்கே உபயோகித்ததில்லை. பித்தளை டவரா, டம்ளர்கள் தான் உபயோகத்தில் இருந்தன. இந்த மாறுதல்கள் தனக்காகவா, கமலிக்காகவா என்று சிந்தித்தான் அவன். கமலயின் வருகை என்னும் நாசூக்கான விஷயம் அப்பாவையும், அந்தப் புராதனமான கிராமத்து வீட்டையும் அதிகமாகப் பாதித்திருப்பது தெரிந்தது.
எல்லாரும் காபி அருந்திய பின் வீட்டையும், தோட்டத்தையும் சுற்றிப் பார்ப்பதற்காகக் கமலியை வசந்தி அழைத்துக் கொண்டு போனாள். பார்வதியும் காபி டிரேயையும் கிண்ணங்களையும் கொண்டுபோய் வைத்துவிட்டுக் கமலியோடும் - வசந்தியோடும் போய் சேர்ந்து கொண்டாள். குமார் ஏதோ சாமான் வாங்கி வருவதற்காகக் கடைக்குப் போயிருந்தான்.
மாடியில் அப்பாவும் பிள்ளையும் தனியே விடப்பட்டிருந்தனர். சர்மாதான் முதலில் ரவியிடம் பேசினார்:-