"இதென்ன பெரிய அரண்மனையா சுத்திப் பார்க்கிறதுக்கு? அந்தக் காலத்து வீடு.... அவளோ பெரிய கோடீசுவரன் வீட்டுப் பொண்ணுன்னு வசந்தி சொன்னா..."
"அரண்மனையோ குடிசையோ என் சம்பந்தப்பட்ட எதிலும் அவளுக்கு அக்கறை உண்டு. இந்தியா, இந்தியக் கலாச்சாரம், இந்தியக் கிராமங்கள், கிராமத்து வாழ்க்கை எல்லாத்திலேயும் கமலிக்குக் கொள்ளை ஆசை அப்பா!"
"உங்கம்மாட்ட நான் முழு விவரமும் சொல்லலே... உன்னோட ரெண்டாவது லெட்டரைப் படிச்சுக் காமிச்சேன். படத்தைப் பார்த்தா. யாரு? தெரிஞ்சவளா? கூடச் சுத்திப் பார்க்க வராளான்னு கேட்டா, ஆமாம்னேன். அதோட சரி... அப்புறம் மேற்கொண்டு அவளும் கேழ்க்கலை... நானும் சொல்லலை."
"நீங்க சொல்லாததுதான் தப்பு அப்பா! ஒரு விஷயத்தைப் பூசி மெழுகறதுங்கறதையே பல நூற்றாண்டுகளா நம்ம நாட்டிலே ஒரு கலையா வளர்த்துண்டிருக்கோம். அதனாலேதான் எல்லாத்திலியும் எல்லாக் கெடுதலும் வரது..."
"உங்கம்மாகிட்ட மட்டும் இல்லேடா ரவி! யாருகிட்டவுமே நான் எதையும் சொல்லலே. வேணு மாமா, வசந்தி, இவா ரெண்டு பேருக்குத்தான் ஏற்கனெவே எல்லாம் தெரியும். இப்போ புதுசா எனக்குத் தெரியும்."
"இது மாதிரி ஊர்லே, ஒரு விஷயத்தை நேராக அறிவிப்பதைவிட வேற எதுவும் செய்யறதிலே பிரயோஜனமில்லேப்பா. அறிவிக்கிறதைவிட அநுமானத்துக்கு விடறதுதான் அபாயகரமானது."
"என்னமோடா நீ சொல்றே! எனக்கானா அத்தனை துணிச்சல் வரலே; உங்கம்மாட்டவே சொல்றதுக்கு பயமாயிருக்கு. மத்தவாகிட்ட எப்பிடிச் சொல்றது? உனக்கே தெரியும். நான் சொல்லணும்கிறதில்லே. ஸ்ரீமடத்துப் பொறுப்பு என் கைக்கு வந்ததிலேருந்து ஊர்லே எத்தனை பேரோட விரோதம் ஏற்பட்டிருக்குத் தெரியுமா?"
"விரோதத்துக்குப் பயப்படறதாலேயும் தயங்கறதாலேயும் அது போயிடாதுப்பா! ஃபேஸ்