காருக்குத் திரும்பினார்கள் அவர்கள். அந்தப் பிள்ளையாரின் பெயர், அவ்வூர் வழக்கம், முதலியவற்றை கமலிக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டு வந்தான் ரவி. ரெவ்லான் இன்டிமெட் வாசனை காரின் உட்பகுதி முழுவதும் கமகமத்துக் கொண்டிருந்தது. அந்தக் கிராமமும் அதன் இயற்கையழகு மிக்க சூழலும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்லி வியந்து கொண்டு வந்தாள் கமலி. நடுநடுவே ரவி பிரெஞ்சிலோ, ஆங்கிலத்திலோ கேட்பவற்றுக்கு அவன் கேட்ட மொழியிலேயே பதில் கூறினாலும் கமலி கூடியவரை தமிழிலேயே பேச முயன்றாள்.
ஒரு மொழியைப் புதிதாகக் கற்றுக் கொண்டவர்கள் பேசும், புத்தகத்தில் அச்சடித்தாற் போன்ற சொற்களின் முனைமுறியாத் தன்மை அல்லது உச்சரிப்புக் குறைபாடுகள் சில இருந்தாலும் மொத்தத்தில் அவள் பேசிய தமிழ் நன்றாகவும் புரிந்து கொள்கிறாற் போலவும் இருந்தது.
தமிழில் தான் அறிய நேர்ந்த ஒவ்வொரு புதுச் சொல்லையும், சொற்றொடரையும் வியந்து வரவேற்று ஒரு புதுத் தொகையை வருமானமாக ஏற்று வரவு வைப்பது போல மகிழ்ந்தாள் அவள். எந்த ஒரு புது மொழியையும் விரும்பி ஆர்வத்தோடு கற்பவர்களின் மனநிலை அப்படிப்பட்டதுதான். அந்தப் புதிய மொழியில் அவர்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு புதுச் சொல்லும், புதுத் தகவலும் எதிர்பாராமல் வருகிற ஐசுவரியம் அல்லது புதையலாக இன்பம் அளிக்கும். 'வழித்துணை விநாயகர்' - என்ற பெயர் கமலிக்கு மிக மிகப் பிடித்துப் போயிற்று. அதைச் சொல்லிச் சொல்லி வியந்தாள் அவள். சர்மா கூறினார்:
"இந்த ஊர் ஸ்தல் வரலாற்றிலே 'மார்க்க சகாய விநாயகர்'னு தான் இருக்கு! ஜனங்கள் எல்லாம் வழித்துணை விநாயகர்னு சொல்றா" -
"பழைய வரலாற்றிலே என்ன பேர் இருந்தாலும் பெருவாரியான மக்கள் வழங்குகிற பெயர்தான் நிலைக்கும். மக்களின் நடை, பாவனை, பேச்சு, மொழியும் விதம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் தான் 'லிங்விஸ்டிக்ஸ்' அதாவது மொழியியல் உயிருள்ள சயின்சாக வளர்கிறது. அப்படி முக்கியத்துவம் அளிக்காமல் மொழியின் ஆரம்பகாலச் சட்ட திட்டங்களிலேயே நகராமல் நின்று கொண்டிருப்பதனால்தான் கிராமர் - அதாவது இலக்கணம் நாளடைவில் ஒரு பழைய காலத்து மியூஸியம் போல் ஆகிவிடுகிறது" என்றாள் கமலி.
இதைக் கேட்டு அந்த பிரெஞ்சு யுவதி இணையற்ற அழகு மட்டுமல்ல; நிறைய விஷய