ஸ்ரீராமச் சந்திரனுக்கு மங்களம் சுபமங்களம்..."
வசந்திக்கு இவ்வளவு இனிமையான குரல் உண்டு என்பதைக் கமலி அன்றுதான் முதல் முதலாக அறிந்தாள். அதிகாலையின் இதமான மோனத்தைப் பறவைகளின் குரல்கள் மெதுவாகக் கலைத்துக் கொண்டிருந்த வேளையில் அந்த ஆரத்திப் பாட்டு மிகவும் சுகமாக இருந்தது. கோலத்தையும் பாட்டையும் 'லவ்லி' 'லவ்லி' என்று பாராட்டினாள் கமலி.
ஒதுங்கினாற் போல் நின்று கொண்டிருந்த தன் தாய்க்கு அருகே கமலியை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினான் ரவி. சர்மாவை வணங்கியது போலவே காமாட்சியம்மாளையும் கால்களில் குனிந்து வணங்கினாள் கமலி. ஆனால் காமாட்சியம்மாள் அவள் வணங்கும்போது சற்றே பயந்தாற்போலவும், ஒதுங்கினாற் போலவும் விலகி ஒதுங்கி நின்று விட்டாள். கூச்சமா அல்லது கோபமா என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
"அப்படியே மாடிக்கு அழைச்சுண்டு போ... நீங்க தங்கிக்கறதுக்கு அங்கே எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்கேன்" என்று ரவியிடம் சொன்னார் சர்மா.
"ஏற்பாடென்ன வேண்டிக் கிடக்கிறது? இருக்கிற இடத்திலே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே? கமலிக்குன்னு தனி சௌகரியம் எதுவும் வேண்டியதில்லே அப்பா!"
"யெஸ்! ஐ ஆம் டயர்ட் ஆஃ லக்சுரீஸ்... அண்ட் மணி ஹெட்டெட் லைஃப்" - என்று கமலியும் ரவியோடு சேர்ந்து சொன்னாள்.
ஆனாலும் சர்மா சொல்லி ஏற்பாடு செய்திருந்தபடி ரவி - கமலி சம்பந்தப்பட்ட பெட்டிகள், சாமான்கள் எல்லாம் மாடியிலேயே கொண்டுபோய் வைக்கப்பட்டன. முதல் நாளே வசந்தி சொல்லியிருந்ததால் குமார் தன் கல்லூரிக்கும் பார்வதி பள்ளிக்கூடத்துக்கும் அன்று லீவு போட்டிருந்தார்கள். வசந்தியும் கூட இருந்தாள்.
"சிரமப்பட்டு இதெல்லாம் எதுக்குப் பண்ணினேள் அப்பா? மோட்டார் - ஓவர் ஹெட் டேங்க் - அட்டாச்டு பாத்ரூம் - டைனிங் டேபிள்... இதெல்லாம் வேணும்னு நான் எழுதலியே? கமலி ரொம்ப ஃப்ளெக்ஸிபிள் டைப்... இருக்கிற வசதிக்கு ஏத்தாப்பில எங்கேயும் அட்ஜஸ்ட்