பண்ணித்தான் ஆகணும். நம்மகிட்டத் தப்புத் தண்டா இல்லாத போது நாம் யாருக்குப் பயப்படணும்? எதுக்குப் பயப்படணும்?"
"அதெல்லாம் இருக்கட்டுண்டா! அப்புறம் பேசிக்கலாம். நீ முதல்லே உங்கம்மாவைப் பார்த்துவிட்டு வா. அவ உங்கிட்டச் சரியாகவே பேசலை போலிருக்கே... அந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு போய் என்னமோ சொன்னியே....? அப்போ அவ 'ரியாக்ஷன்' எப்படி இருந்தது?"
"அம்மா, சரியா இல்லே அப்பா! கமலி நமஸ்காரம் பண்ணினப்பவே அவ மூஞ்சியைத் தூக்கி வச்சுண்டு இருந்தா. தெரு வாசல்லே வச்சு அவகிட்ட விவாதம் பண்ண வேண்டாம்னு நானும் அப்போ பேசாம விட்டுட்டேன்..."
"செம்மண் கோலம், ஆரத்தி எல்லாம் கூட வேணு மாமா பொண்ணும் நம்ம பாருவுமாத்தான் பண்ணியிருக்கா. காமுவுக்கு இதெல்லாம் பிடிச்சிருக்காது. உன் கல்யாணத்தைப் பத்தி அவ என்னென்னமோ சொப்பனம் கண்டுண்டிருக்கா. தெருவை அடைச்சுப் பந்தல் போட்டு நாலு நாள் கல்யாணம், நலுங்கு, மஞ்சள், தேங்காய், ஊஞ்சலோட பண்ணணும்னு அவளுக்கு ஆசை..."
"யார் வேண்டாம்னா? சடங்கு சம்பிரதாயத்தில் அத்தனை ஆசைன்னாக் கமலிக்கும் எனக்குமே அந்த மாதிரி நாலு நாள் கலியாணம் நடத்திச் சந்தோஷப்படட்டுமே? அவளுக்கும் இந்தியக் கல்யாணச் சடங்குகள்னா ரொம்பப் பிரியம்..."
"போடா போ! நான் என்னத்தையோ சொன்னா நீ என்னத்தையோ பதில் சொல்றே! வீட்டுக்கு அடங்கின மருமகளாத் தனக்கு அடங்கின கிராமாந்தரத்து மாட்டுப் பெண் ஒண்ணு வரணும்கறது காமுவோட பிரியம்."
'பேப்பர்'-என்ற கரகரத்த குரலுடன் தெருத் திண்ணையில் காலைத் தினசரி வந்து விழுகிற சத்தம் கேட்டது. ரவியே படியிறங்கிப் போய்ப் பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, "நீங்க பேப்பரைப் பார்த்திண்டிருங்கோ அப்பா! நான் போய் அம்மாட்டப் பேச்சுக் குடுத்துப் பார்க்கிறேன்" என்று வீட்டுக் கூடத்துக்குப் போனான்.
ரவிக்கும் அம்மாவைப் பார்க்கக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது.