அவன் போனபோது அம்மா சமையலறையிலே இல்லை. கொல்லைப்பக்கம் அவள் குரல் கேட்டது. அம்மாவின் குரலுக்கு வசந்தி ஏதோ பதில் சொல்லுவதும் அவன் காதில் விழுந்தது.
உடனே ரவி கொல்லைப் பக்கம் விரைந்தான். அம்மா எதிரே வந்தாள். ஆனால், அவனைப் பார்க்காதது போல விடுவிடுவென்று நடந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு சமையல் கட்டுக்குள் புகுந்து கொண்டாள். வசந்திக்கும் அம்மாவுக்கும் என்ன உரையாடல் நடந்திருக்கும் என்றறியும் ஆவலில் ரவி முதலில் கிணற்றடிக்கே சென்றான். துளசி மாடம் இருந்த இடத்தின் அருகே சிறிது தொலைவு விலகினாற் போல் நின்று கமலிக்கு அதைச் சுட்டிக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் வசந்தி. கமலி ஆர்வமாகக் கேட்டுக் கொண்டு நின்றாள். பார்வதியும் பக்கத்தில் இருந்தாள்.
"அம்மா என்ன சொல்றா வசந்தி?" என்ற கேள்வியோடு அவர்களருமே சென்றான் ரவி.
"ஒண்ணுமில்லே! மாமி இப்பத்தான் விளக்கேற்றித் துளசி பூஜை பண்ணி முடிச்சிருக்க. நாங்க ரெண்டு பேரும் குளிக்காமக் கிட்டப் போயித் துளசி மாடத்தைத் தொட்டுடப் போறோமோன்னு பயந்துண்டு வந்து எங்கிட்டச் சொல்லிட்டுப் போறா ரவீ! ஆனா மாமி வந்து சொல்றதுக்கு முன்னாடி கமலியே, "கோலம், குங்குமம், மாடத்தில் எரியும் விளக்கு எல்லாம் பார்த்தால் இப்பத்தான் பூஜை முடிஞ்ச மாதிரி இருக்கு. நீயும் ஸ்நானம் பண்ணின மாதிரி தெரியலே. நானும் ஸ்நானம் பண்ணலே... எதுக்கும் தீட்டு இல்லாமே ஒதுங்கி நின்னு பார்ப்போம்"னு எங்கிட்டச் சொல்லிட்டா. அதையே மாமிகிட்டச் சொன்னேன் நான். 'இந்து மேனர்ஸ் கஸ்டம்ஸ் அண்ட் செரிமனீஸ்'னு ஏதோ புஸ்தகத்திலே கமலி இதெல்லாம் ஏற்கெனவே படிச்சிருக்காளாம்."
இதைக் கேட்டு ரவி புன்முறுவல் பூத்தான். கமலியும் அவனை நோக்கிப் புன்னகை செய்தாள்.
"கமலியைத் தோட்டத்துக்குக் கூட்டிண்டு போ வசந்தி! காலம்பர நீங்க ஸ்டேஷன்ல போட்ட மல்லிகை மாலையின் வாசனையைப் புகழ்ந்து குறைஞ்சது இதுக்குள்ளே நூறு தடவையாவது அவ எங்கிட்டச் சொல்லியிருப்பா. அவளுக்குத் தெரிஞ்ச ஒரே மல்லிகை பாரிஸ்லே 'ஜாஸ்மின்'னு ஒரு மெட்ரோ ஸ்டேஷன் இருக்கே அதான். நம்ம தோட்டத்திலே நிஜம் மல்லிகைச் செடியையே பூவோட அவளுக்குக் காமி."