கம்பிகளை மேல் கம்பிமேல் தட்டவிட்ட குள்ளமான உருவம்... மூன்றாவது அசல் அழகுமயம்... உதட்டுச் சாயம்தான் அதிகம். மோவாய் நீளத்திற்கான பின்கொண்டை... தெலுங்குச் சாடை... மற்றொன்று, கன்னட வாடை... ஒரு கண்ணைச் சுண்டி, மறுகண்ணைச் சீண்டிவிட்டுப் பார்க்கும் குறும்புப் பார்வை. நாட்டுக் கட்டை உடம்பு... உருக்கு வட்டக் கம்பிக் கண்கள்... மற்றொன்று, நம்ம ஊரின் அந்தக் காலத்து ‘ஒடக்கு’ மாதிரியான ஒல்லி...
சுயம்பு கிட்டத்தட்ட குட்டிச்சாமியார் போல் மற்றவர்களுக்குப் பட்டாலும், அவர்களுக்கு அல்லது அவள்களுக்கு, அவனுக்குள்ளே ஒரு ‘குட்டி’ இருக்கும் அடையாளம் தெரிந்தது. ஆளுக்கு ஆள், அவன் கையையும் காலையும் தொட்டார்கள். எதிர்பாராத இனிய விருந்தாளி வந்தால் எப்படிக் குதுகலிப்போமோ... அப்படி... அவள்கள் டோலக்கைத் தட்டிவிட்டு, புல்புல் தாராவை ஒலியெழுப்பி, அவனைச் சுற்றிச் சுற்றியே ஆடினார்கள். டோலக்காரி கேட்டாள். அந்தக் கேள்விக்கு பதிலும் சொல்லிக் கொண்டாள். ‘நீ யாரு... ஒனக்கு நாங்க இருக்கோம். பிகர் மத் கரோ...’
அவன், புரியாமல் முழித்தபோது, மொழி ஒரு முக்கிய விஷயம் இல்லை என்பது போல் டோலக்காரி, அவன் முதுகையும் டோலக் மாதிரியே தட்டினாள்.
இதற்குள், எல்லோரும் சுயம்புவை இடுப்பிலும் தோளிலும் கை போட்டபடி, அவனை, எந்த வீட்டிலிருந்து வெளிப்பட்டார்களோ அங்கே கூட்டிப் போனார்கள். அவனுக்கும், அவர்களைப் பார்க்கப் பார்க்க, அவர்களின் வாய்களில் துள்ளி, தனது காதுகளில் விழுந்த வார்த்தைகளில் ‘இனம்’ கண்டான். தேனைக் கொடுத்து மகரந்தத் தூளை வாங்குவதற்கு மலர்ந்த மலர்போல், வாய் விரித்தான். அவர்கள் அருகே நிற்பதிலேயே ஒரு ஆனந்தம். பட்ட பாடெல்லாம் பழங்கதையானது போன்ற இரட்டிப்பு சந்தோஷம்...
அந்த ‘டூரூம்செட்’டின் முதலாவது அறையின் மத்தியில் இரண்டு வெள்ளைக் கம்பிகளுக்கு இடையே இணைக்கப்பட்ட பச்சைக் கம்பிக்குக் கீழே ஒரு தொட்டில்... பூ மெத்தை போன்ற வெல்வெட் மெத்தை. ஒரு நான்கு மாதக் குழந்தை ஒன்று மல்லாந்து கிடந்தது. ‘அவள்கள்’ இல்லாமல் அழப்போன அந்தக் குழந்தை, இப்போது அவர்களைப் பார்த்துவிட்டு, பொக்கைவாய்ச் சிரிப்பைச் சிந்தியது. கைகளை லேசாய்த் தூக்கப் போனது. அந்தத் தொட்டில் அருகே ஒரு மோடாவில் இருந்த இருபத்துநான்கு வயதுப் பெண், அந்தக் கூட்டத்தில் புதிதாய்