இருக்க வேண்டும் என்பது மாதிரி ஒரு ஆசை! அவசரப்பட்டு சைகை செய்துவிட்டோமே என்று வருத்தம். இதற்குமேல் பேசினால், அசிங்கம் என்று சுயமரியாதைத்தனம். அவர்கள் இழுத்த இழுப்புக்கு அவன் நடந்தான். அவர்கள் அவனைச் சுற்றிக் கூத்தாடாத குறையாகக் கூட்டிப் போனார்கள். ஒருத்தி, அவன் தலைத் தூசியைத் தட்டிவிட்டாள். இன்னொருத்தி ‘சாப்பிட்டியா’ என்பது போல், வாயில் கை வைத்துக் கேட்டாள். அவனுக்கும் ஒரு தெம்பு. அதே சமயம் இவள்களும் என்ன செய்வார்களோ என்ற அச்சம். சென்னைச் சம்பவம் திரும்பிவிடுமோ என்ற பயம்.
எதிர்த்திசையிலிருந்து இரண்டு ‘சேலை கட்டிகள்’ வந்தார்கள். சமவயது. ஒருத்தி, கருப்பற்ற - சிவப்பற்ற பொதுநிறம். ஒல்லி. இன்னொருத்தி தடிச்சி. சுயம்புவைச் சுற்றி நின்றவர்களிடம், இந்தியில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த ஏரியாவில் எவனோ ஒருத்தன் விபத்தில் இறந்துட்டானாம். ஒருத்தனுக்கு ஆபீஸ்ல சஸ்பெண்டாம். அழவேண்டிய இடத்திற்கு அழப்போக வேண்டுமாம். அதற்காக ஒரேயடியாய் அழவேண்டியதும் இல்லை என்பது போலவும் பேசினாள். ஒரு பஞ்சாபிக்கு புதுக் கார் வந்திருக்கிறதாம்... விடப்படாதாம்...
அந்த இரண்டு பெண்களும், அன்று தாங்கள் கண்டு பிடித்த வார்டு நடப்புகளை மாற்றி மாற்றி விளக்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒல்லிக்காரி, சுயம்புவின் தோளில் கை போட்டாள். பாடகி நீலிமா விவரம் சொன்னபோது தடித்தவள் சுயம்புவிடம் கேட்டாள்.
“நீ தமிழா...”
சுயம்பு, வெறுமனே தலையாட்டவில்லை. ஆமாம் என்று ஒவ்வொரு எழுத்தையும் தனிப்படுத்தியும் ஒன்றுபடுத்தியும் பதிலளித்து, அவளை நெருங்கியடித்தான். அவள் அவனை இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். பிறகு அவன் மோவாயை நிமிர்த்தியபடி, ஆனந்தமாய்க் கூவினாள்.
“எப்பாடி எனக்கு மகள் கெடச்சிட்டாள். இனிக் கவலையே இல்ல...”
அவள் சுயம்பு தோளில் கையை அழுத்தமாகப் போட்டபோது, ஒல்லிக்காரி அந்தக் கையை எடுத்துக் கீழே போட்டாள். இருவரும் மலையாளத்திலும், தமிழிலும் மோதிக்கொண்டார்கள்.