இதே நிலை நீடித்தால், சம்பந்தப்பட்ட பெண்ணுக்குக் குழந்தை பிறந்தபிறகு கூட கலியாண அழைப்பிதழ் கிடைக்கலாம். கிடைக்குமே... அதுவே பெரிசு.
மேகலை இவ்வாறு தனக்குள் பேசியதைத் தானே ரசித்து, மெல்லச் சிரித்தாள். அண்ணனின் கடிதத்தையும், மீண்டும் மனதுக்குள் வாசித்தாள். அண்ணன் மகன் மோகன் என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்து விட்டானாம். போன மாதம் அனுப்பியதுபோல் அவனுக்குக் கண்டபடி பணம் அனுப்பிச் செல்லம் கொடுக்கக் கூடாதாம். தங்கையின் கலியாணத்திற்கு இதுவரை அனுப்பிய பணத்தில் நிறைய மிச்சமிருக்கிறதாம். ‘ஆபீஸ்கார’ மாப்பிள்ளைக்கு, அளவுக்கு மீறிச் செய்து அவன் ஆசையை பேராசையாக்கக் கூடாதாம். வீட்டுக்கு மனம் போன போக்கில் வாங்கிக்கொண்டு வரக்கூடாதாம். அப்பாவுக்கு பெருமளவு சுகமாகி, இப்போது கம்பை ஊன்றி நடக்கிறாராம். பழைய ஸ்டைலில் பேசத் துவங்கி விட்டாராம். அம்மாதான் இன்னும் சரியான உடல் நிலைக்கோ, அல்லது மனநிலைக்கோ திரும்பவில்லையாம்.
மேகலை யோசித்தாள். அண்ணியைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை. ஏதாவது செய்ய வேண்டும். அம்மாவையும் இங்கே கூட்டி வரவேண்டும். வீட்டில் இருக்கும்போது, கூப்பிட்டதற்கு, மோகனாவுக்குத் தலைப் பிரசவம் பார்த்துவிட்டுத்தான் வருவேன் என்று சொல்லி விட்டாள். அந்தக் கடிதத்தில், அண்ணன் இன்னொரு தகவலும் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. ஊரில் பெருமையாய்ப் பேசுகிறார்களாம். சின்ன வயதில் வந்த கோளாறு இடையிலேயே வந்து இடையிலேயே போய் விட்டதாக நினைக்கிறார்களாம். ஆகையால் ஒரு நாலு நாளைக்கு வேட்டி சட்டை உடுத்தி அதைப் பல்லைக் கடித்தாவது பொறுத்துக் கொள்ள வேண்டுமாம். இதுகூடப் பெரிதாகத் தெரியவில்லை. - ‘இப்படிக்குப் புத்தி சொல்ல யோக்கியதை இல்லாத அண்ணன் ஆறுமுகப்பாண்டி’ என்ற முடிவுரை அவளை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது.
மேகலை அந்தக் கலியாண அழைப்பிதழை மூக்கில் வைத்து ஆட்டியபடியே டேவிட்டை நினைத்தாள். இதற்குள் அண்ணனின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. அவசர அவசரமாய் எழுந்தாள். புடவையைக் களைந்து விட்டாள். அத்தனைப் பெண் உடைகளையும் கழற்றி விட்டு, வேட்டியை உடுத்திக் கொண்டாள். சட்டையைப் போட்டுக்கொண்டாள். இப்போதே பழகிக் கொள்ளலாம். மேகலை, சுயம்புவானான்.
இதற்குள் உள்ளே ஓடி வந்த லட்சுமி, குஞ்சம்மா வகையறாக்கள், அவளை ஆச்சரியத்தோடு