சிறுகதை - புதுமைப்பெண் - சா செய்யது சுலைஹா நிதா
குடிசை வீட்டில் வாழ்வது எவ்வளவு கடினமான விஷயம் என்பது வாழ்ந்து கொண்டிருக்கும் அவளுக்குத் தெரியும்,பணம் இருந்திருந்தால் அவளை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்திருப்பர் அவளது பெற்றோர்,பணம் இருந்திருந்தால் தான் ஆசையாக வாங்கிக் கேட்ட மிதிவண்டியை வாங்கியிருக்கலாம்,இப்படி தினமும் இரண்டு கி.மீ நடந்து பள்ளிக்கு வரவேண்டிய அவசியம் இருந்திருக்காது.இவை அனைத்தும் அவள் மனதில் ஊசலாடிக் கொண்டிருக்க, தன் முறை வந்தபொழுது சபையினரை வணங்கி தன் உரையைத் தொடங்கினாள்.”பணம் மட்டும் வாழ்க்கையில்லை, வாழ்க்கையில் சாதித்தவர்கள் எல்லாம் எளிய நிலையில் இருந்து முன்னேறியவர்களே” என தன் எண்ண ஓட்டத்திற்க்கு எதிராய் வாதாடிக் கொண்டிருந்தாள் ஜனனி.
ஜனனி தான் இந்த கதையின் நாயகி.அவளது குடும்பம் மிகவும் ஏழ்மையானது.ஆனால் பாசத்திற்குக் குறைவில்லை.அவளது அப்பாவும் அம்மாவும் கூலி வேலை செய்கிறார்கள்.அவளுக்கு இரண்டு தங்கைகள்.இவள் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.இவளது தங்கைகள் பதினொன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள்.என்ன கஷ்டமாக இருந்தாலும் இவர்களது படிப்பிற்குக் குறை வரக் கூடாது என்பதில் இவளது பெற்றோர் உறுதியாய் இருந்தனர்.அதை புரிந்து கொண்டவளாய் ஜனனி மிகவும் நன்றாக படித்தாள்.வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்குவாள்.படிப்பைத் தவிர விளையாட்டு மற்றும் பேச்சுப் போட்டி என அனைத்திலும் முதன்மையானவளாய் திகழ்ந்தாள்.தன் பெற்றோரை கண் கலங்க விடமாட்டாள்.தன்னால் முடிந்தவரை அவர்களை சந்தோசமாய் வைத்திருப்பாள்.தன் தங்கைகளுக்கு இன்னொரு தாயாக இருந்தாள்.அவர்களது ஆசைகளை நிறைவேற்றுவதற்காக தன்னால் இயன்றவற்றை எல்லாம் செய்தாள்.
“ஜனனி இந்த முறையும் நீதான் முதல் மதிப்பெண் வாங்கியிருக்கிறாய்.இதே போல் பொதுத் தேர்விலும் முதலாவதாய் வந்து பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும்” என தன் ஆசிரியர் கூறுவதைக் கேட்டு மகிழ்ச்சியுடன் தன் விடைத்தாளை வாங்கி பார்த்துக் கொண்டிருந்தாள். ”வகுப்பு முடிந்து விட்டது,அனைவரும் சாப்பிடச் செல்லலாம்” எனக் கூறிவிட்டு ஆசிரியர் விடை பெற்றுக் கொண்டார்.ஜனனியும் தன் தோழிகளுடன் சாப்பிடச் சென்றாள்.போகும் வழியில் சந்திரா தன் அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் எனவும் அவளுக்கு வர போகும் மாப்பிள்ளை பற்றியும் விளையாட்டாய் பேசிக் கொண்டிருந்தாள்.பின் ஜனனியின் பக்கம் திரும்பிய சந்திரா“படிப்பாளி,நீ சொல் உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும்” எனக் கேட்டாள்.ஜனனியோ “எனக்கு இப்போதைக்கு அதைப் பற்றி எந்த எண்ணமும் இல்லை சந்திரா.நான் முதலில் நன்றாக படித்து வேலைக்குப் போய் சம்பாதித்து என் குடும்பத்தை மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும்.அதன் பின் தான் இதைப் பற்றி எல்லாம் யோசிப்பேன்” எனக் கூறிய அவளை பெருமிதத்துடன் பார்த்தனர் ஜனனியின் தோழிகள்.”உன் நல்ல மனசுக்கு நீ நினைப்பதைப் போலவே எல்லாம் நடக்க வேண்டும் என வரம் அளித்தேன் மகளே” என அவளைக் கிண்டல் செய்தாள் மதி.அனைத்து தோழிகளும் அவளுடன் சேர்ந்துக் கொண்டு ஜனனியைக் கேலி செய்தனர்.அன்றைய நாள் இதேபோல் மகிழ்ச்சியுடன் இனிதே முடிந்தது.
பள்ளி முடிந்து வீட்டிற்க்கு வந்தாள் ஜனனி.தன் வீட்டில் எப்பொழுதும் இருக்கும் மகிழ்ச்சி, இன்று தொலைந்து போய் இருப்பதைக் கண்டாள்.”ஜனனி, வந்துட்டியாமா? உன்னைப் பார்க்கத்தான் பாட்டி ஊரிலிருந்து வந்திருக்கிறேன்.எப்படி இருக்கிறாய்” என கையில் மளிகைச் சாமானோடு வீட்டின் உள்ளே நுழைந்த பாட்டியை ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டாள் ஜனனி.முத்த மழை பொழிந்தார் பாட்டி.”உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகி விட்டன ஜனனி.எவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாய்” என பாட்டி கூறவும் தன் அம்மா பாட்டியை ஒரு பார்வை பார்த்தார்.அங்கு என்ன நடக்கின்றது என ஜனனிக்குப் புரியவில்லை.ஆனால் ஏதோ சரியில்லை என்பது மட்டும் அவளுக்குப் புரிந்து விட்டது.
மறுநாள் காலையில் பள்ளிக்குக் கிளம்பிய ஜனனியை,”பாட்டி வந்திருக்கிறேன் .நீ பள்ளிக்குக் கிளம்புகிறாயே ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்” என பாட்டி கூறியது அவளுக்குக் கட்டளையாகத் தெரிந்தது.
”சரி பாட்டி” எனக் கூறிவிட்டு வீட்டின் உள் சென்ற அவளை “அக்கா நாங்களும் இன்று பள்ளிக்குச் செல்லவில்லை.எங்களையும் பாட்டி விடுப்பு எடுக்கச் சொல்லி விட்டார்.வா, விளையாடச் செல்வோம்” என விளையாடச் சென்ற அவர்களை,”விளையாடும் வயசா உனக்கு.போய் வீட்டு வேலையைக் கற்றுக்கொள்” என பாட்டி கூறவும் தூக்கிவாரிப் போட்டது ஜனனிக்கு.
சிறிது நேரத்தில் பாட்டி அவளிடம் வந்து நகைகளையும் சேலையையும் கொடுத்து அணிந்துக் கொள்ளச் சொன்னாள்.எதற்கு என கேட்டவளை,உன்னை சேலையில் பார்க்க வேண்டும் போல் உள்ளது என கூறி சமாளித்து விட்டார்.சேலை அணிந்து அவள் நின்றதைக் கண்டதும் ஜனனியின் தாய் அழுது கொண்டே சென்று விட்டாள்.அதைக் கண்ட ஜனனிக்கு ஏதோ சரியில்லை என்றே தோன்றியது.ஆனால் கேட்க தைரியம் அற்றவளாய் நின்று கொண்டிருந்தாள்.தன் தந்தையிடம் தான் முதன் முதலில் சேலை அணிந்திருப்பதைக் காட்டுவதற்காகத் தேடிக் கொண்டிருந்தாள்.