" உன் ஒருவனுக்காக, எல்லா தொழிலாளர்களும் சம்பளத்தை இழக்கமுடியாது, இழக்கக்கூடாது, அது முதலாளிக்குத்தான் சாதகமாகிவிடும். நீ கவலைப்படாதே! ஆறே மாதங்களில், உனக்கு வேலை திரும்பக் கிடைத்துவிடும், அப்போது ஆறுமாத சம்பளமும் கிடைத்துவிடும்! நாங்கள் அதற்கு பொறுப்பு! தைரியமாயிரு!"
வேலையில்லாதபோது, வீட்டில் சும்மா இருக்கமுடியாமல், இடதுசாரி பொருளாதார புத்தகங்களை படித்தார். கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், டிராட்ஸ்கி, சூ-என்-லாய், லெனின்!
அவர் கண்முன்பாக, மூன்று காட்சிகள் திரும்பத் திரும்ப அரங்கேறின: முதலாவது, இன்றைய ஏழைகளின் வறுமைப் பிணி! இரண்டாவது, கடுமையான வர்க்கப் போராட்டம், மூன்றாவது, மறுமலர்ச்சி சமத்துவ சமுதாயம்!
தன்னை லெனினாகவும், ஸ்டாலினாகவும், சூவென்லாயாகவும் பாவித்துக்கொண்டு, கற்பனை உலகில் மிதந்தார். அதன் விளைவாக, அருகிலிருந்த கட்சித்தோழர்களுடன் நெருங்கிப் பழகினார். கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டார்.
விரைவிலேயே தோழர் ஈசுவரனாக அறிமுகமானவர், தலைவர் விவேகனாக உயர்ந்தார். தன் பழைய வேலையைப்பற்றி நினைவு அறவே இல்லாமல் போனது!
குடும்பம் வறுமையில் சிக்கி தவிப்பதைப் பற்றி தந்தை தெரிவிக்கும்போதெல்லாம், " அப்பா! நீ உன் மகனை ஒரு புதிய சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் இயக்கத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதை எண்ணி பெருமைப்படு!" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
பாவம்! அவர் தள்ளாத வயதிலும், உழைத்து, குடும்பத்துக்கு ஒருவேளை உணவுக்கு வழி செய்தார்!
மனம், ஓயாமல், மாறிக்கொண்டே இருப்பது! கிளைக்கு கிளை தாவிக்கொண்டே இருப்பது!
ஈசுவரனின் மனதும் அப்படித்தானே! தான் புத்தகங்களில் படித்ததற்கும், நடைமுறையில் இடதுசாரி கட்சிகள் செயல்படுவதற்கும் இடையே பெரிய வேற்றுமையை கவனித்தார்.
அவர்தான் துணிவாக பேசக்கூடியவராயிற்றே, கட்சித் தலைவர்களை கேள்வி கேட்டு துளைத்தெடுத்தார். விளைவு? அவர் இயக்கத்திலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
பேக் டு ஸ்க்கொயர் ஒன்!
ஈசுவரன் வெறுத்துப்போய், தனிநபர் வாழ்க்கைக்கு திரும்பினார்.
தந்தையின் வழிகாட்டுதலுடன், வியாபாரத்தில் இறங்கினார். எந்தப் பணியானாலும், அதில் தீவிரம் காட்டுபவராயிற்றே!
வியாபாரத்திலும் அப்படியே! இரவு, பகல் பாராமல் உழைத்தார். பலன் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கிடைத்தது!
அவருடைய குடும்பம் பழைய சௌகரியமான நிலைக்கு திரும்பியது.
ஈசுவரனுக்கு, நான், நீ என்று வசதியான குடும்பங்களிலிருந்து பெண் கொடுக்க போட்டி போட்டனர்.
என்ன இருந்தாலும், பழைய வாசனை போகுமா?
தேடிச் சென்று ஒரு கீழ்தட்டு மத்தியதர வர்க்கப் பெண்ணை பதிவுத் திருமணம் செய்துகொண்டு வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அந்த மகாலட்சுமி வளர்த்த குடும்பத்தின் மூத்தமகன் தான், கண்ணன்! இரண்டாவது மகனும், ஒரே மகளும் நன்றாகப் படித்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள்.
மூத்தவன் கண்ணனிடம் வியாபாரத்தை ஒப்படைத்துவிட்டு, அவனுக்கு திருமணமும் செய்து வைத்துவிட்டு, ஒதுங்கிக்கொண்டார்!
சென்ற ஆண்டுதான், அவர் மனைவி திடீரென நிமோனியா காய்ச்சலில் காலமானாள்.
அதிலிருந்து ஈசுவரன் தன் மனதிற்குள்ளேயே வாழ்ந்து வந்தார். ஆழ்ந்து சிந்திக்கலானார்! உண்மைகள் பிடிபடலாயிற்று!
கண்ணன் இரவு வீடு திரும்பும்போது, நேரமாகிவிட்டது. அதனால் பெரியவர் அவனை தொந்தரவு செய்ய மனமில்லாமல், தன் அறையில் முடங்கிக் கிடந்தார். ஆனால், மகன் அவரைத் தேடி அவர் அறைக்கு வந்தான்.
" அப்பா! உன் வாய்க்கு சர்க்கரை போடவேண்டும். பத்து நாட்களாக காத்திருந்த ஆர்டர் இன்று கிடைத்துவிட்டது. இதனால், அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு வியாபாரம் செழிப்பாக இருக்கும்.
அப்பா! பத்து நாட்கள் சலிப்பிறகுப் பிறகு, இன்று இந்த ஆர்டர் வந்ததும், எனக்கென்னவோ இதுவரை நான் அனுபவிக்காத, சந்திக்காத அதிர்ஷ்டத்தை அடைந்ததுபோல், ஆனந்தமாயிருக்கிறேன். காரணம், நீ சொன்னதுபோல, சலிப்பு மாறியதே!
முற்றிலும் உண்மை, நீ கூறியது! வாழ்க்கையில் மாற்றம்தான் சுவையே!