அதைப்போல எங்களுக்கு லீவு உண்டா, போனஸ் உண்டா, சம்பள உயர்வு உண்டா,ன்னு கேட்டால், அவங்க என்னை கேட்கறாங்க, நீ செய்கிற ஒண்ணரைமணி நேர வேலைக்கு இதுக்குமேலே தரமுடியுமா?ன்னு! அவங்க வீட்டிலே செய்வது ஒண்ணரை மணி நேர வேலைதான், ஆனா மற்ற ஐந்து வீடுகளிலும் செய்கிற வேலையை கணக்கில் எடுத்தால், நானும் ஒருநாளைக்கு எட்டு ஒன்பது மணி வேலை செய்கிறேன்!
விடுங்க! இதையெல்லாம் பேசினா, வாயாடின்னு வேலையை விட்டு எடுத்துடுவாங்க!
எதுக்கு வம்பு?ன்னு வாயை மூடிக்கிட்டு நாளை தள்ளிக்கிட்டிருக்கோம்..."
மை காட்! ரித்விகாவின் அன்றாட வேலைகளை சொல்லவந்தவன், எங்கேயோ தடம் மாறிவிட்டேனே....
தவிர, அவர்கள் வசிக்கும் வீடு, அந்தக் காலத்து வீடு! மற்ற வீடுகளுடன் ஒப்பிடும்போது, வாடகை குறைவு! அதனால், அந்த வீட்டிலேயே பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.
இதில் சங்கடம் என்னவென்றால், துருப்பிடித்த குழாய்கள், உளுத்துப்போன மின்சார வொயர்கள், ஆட்டம் போடும் சுவிட்ச்கள், தரையில் பொந்துகள், இத்யாதி!
அடிக்கடி இவைகள் தொந்தரவு தரும். அவற்றை வீட்டின் ஓனர், கவனிக்கமாட்டார், வசிப்பவர்கள்தான் ரிபேர் செய்துகொள்ளவேண்டும், தினமும் இந்த வேலைகளுக்காக, பிளம்பர், எலெக்ட்ரீஷியன், கார்ப்பெண்டரை தேடிப் பிடித்து வேலை வாங்கவேண்டும், அதிக கூலி கேட்பார்களே தவிர, ஒழுங்காக வேலை செய்யமாட்டார்கள்.
மத்தியதர வர்க்க மக்களின் அன்றாட பிரச்னைகள் இவை!
இவைதவிர, பள்ளியில் படிக்கும் மகளின் பாட புத்தகம், நோட் புக், பேனா, பென்சில், ஜியாமெண்ட்ரி பாக்ஸ், முதலியவைகளை வாங்கித்தர, ரித்விகாதான் மகளை அழைத்துக்கொண்டு கடைக்குச் செல்லவேண்டும்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் வீட்டு வேலைக்காரி வரவில்லை.
ரித்விகாவின் செல் இசைத்தது. எடுத்துப் பேசினாள்.
" அம்மா! என் புருஷன் மூட்டை தூக்கும்போது, காலில் அடிபட்டுக் கொண்டுவிட்டார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துக்கொண்டு போகவேண்டியிருக்கு. அதனாலே, இன்னிக்கி வேலைக்கு வரமுடியலேம்மா!"
ரித்விகா என்ன செய்யமுடியும்?
மூச்சை பிடித்துக்கொண்டு, பாத்திரங்களை தேய்த்து கழுவி சுத்தம் செய்து அதனதன் இடங்களில் அடுக்கிவிட்டு, அதே மூச்சில் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்தாள்.