பிற்பகல் மணி இரண்டு! பசி வயிற்றை கிள்ளவே, சாப்பிட அமர்ந்தாள், ரித்விகா!
சாப்பிட்டுக்கொண்டே, மனதில் தீர்மானித்துக் கொண்டாள். எதுவானாலும் சரி, சாப்பிட்டவுடன் அரை மணி நேரம் படுத்தால்தான், உடல் களைப்பு தீரும்......
வாசல் காலிங் பெல் ஒலித்தது!
பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் எழுந்து சென்று வாசல் கதவை திறந்தாள்.
வீட்டின் ஓனர்!
அவருடன் கூடவே ஒரு மேஸ்திரி!
" ரொம்பநாளா கேட்டுக்கொண்டிருந்தீங்களேசுவர்களுக்கு சுண்ணாம்பு அடிக்கணும்னு, அதுக்காக மேஸ்திரியை அழைத்து வந்திருக்கேன், அவர் வீட்டை சுற்றிப் பார்த்து எவ்வளவு ஆட்கள் தேவை, எத்தனை நாட்களாகும், எவ்வளவு பணமாகும்னு எஸ்டிமேட் போட்டு சொல்வார்........"
பேசிக்கொண்டே இருவரும் வீட்டுக்குள் வந்துவிட்டனர்.
ரித்விகா தொடர்ந்து சாப்பிட முடியுமா என்ன? அப்படியே பாதியில் கை கழுவிவிட்டு, மேஸ்திரிக்கு வீட்டை சுற்றிக் காட்டினாள்.
வீட்டு ஓனரும் மேஸ்திரியும் அங்கேயே அமர்ந்து விவரமாக பேரம் பேசி முடித்துவிட்டு கிளம்பும்போது, மணி ஐந்து!
" நாளைக்கே சுண்ணாம்பு அடிக்கிற வேலை ஆரம்பமாயிடும், மூணு நாலு நாட்களிலே வேலை முடிஞ்சிடும், உங்களுக்குத்தான் இந்த நாலு நாட்களும் சாமான்களை நகர்த்துகிறதும் திருப்பி வைக்கிறதுமா வேலை கொஞ்சம் அதிகமாயிருக்கும். என்ன செய்வது? சுண்ணாம்பு அடிக்கலேன்னா, வீடு வீடாகவே இருக்காதே, நான் வரேம்மா!"
மகனும் மகளும் பள்ளிக்கூடம், கல்லூரியிலிருந்து திரும்புகிற நேரம்!
வழக்கமான தொடர்ந்த வேலைகள்!
கணவன் வீடு திரும்பி எல்லோரும் சாப்பிட்டுவிட்டு சமையலறையை ஒழுங்கிபடுத்திவிட்டு, ரித்விகா 'அப்பாடா' என படுக்கையில் விழுந்தபோது, கணவன் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான், அவன் களைப்பு அவனுக்குத்தான் தெரியும்!
ரித்விகா நினைத்துப் பார்த்தாள், தன் நிலமையை!
காலையில், படுக்கையிலிருந்து எழுந்திருக்கமுடியாமல் 'இன்னும் ஒரு பத்து நிமிஷம் தூங்குவோம்' என நினத்ததை!
அந்த பத்து நிமிஷம் இன்றுமட்டும் அல்ல, என்றுமே அவளுக்கு கிடைக்காது!