" ஐயா! அவங்களை தப்பா நினைக்காதீங்க! தினமும் காலையிலிருந்து ராத்திரி வரையிலும், யாராவது வந்து எதையாவது பேசி தொந்தரவு செய்கிறார்.
அவங்களுக்கு அலுத்துப் போயிடுத்து! அதனாலேதான்........."
" ஓ! அப்படியா! யார் யார் அப்படி வந்தவங்க?"
"ஐயா! காருக்குள்ளே உட்கார்ந்து பேசலாமா? நிறைய பேசணும்......"
சிங்காரம் கார் கதவை திறந்து அவரை அமர்த்திவிட்டு தானும் அமர்ந்தார்.
" ஐயா! அந்தப் பெண்ணுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்ததிலிருந்து, பேங்க் அதிகாரிங்க வந்து, பணத்தை தங்கள் பேங்கில் டெபாசிட் செய்யச் சொல்லி, வற்புறுத்தறாங்க! கடைக்காரங்க, தங்களுக்கு பார்ட்னராக வரும்படி கூப்பிடறாங்க, ஷேர் மார்க்கெட் புரோகர்கள் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்ய வலியுறுத்தறாங்க! இதெல்லாம் விடுங்க, நேற்று ஒரு சினிமா தயாரிப்பாளரின் மேனேஜர் வந்து, வடிவுக்கு சினிமாவிலே நடிக்க சான்ஸ் தரேன், உங்க பணம் ஒரு கோடி ரூபாயை கடனா கொடுங்கன்னு, பிடுங்கி எடுத்துட்டாரு.........."
சிங்காரத்துக்கு நிலைமை தெளிவாகப் புரிந்தது.
" ஐயா! நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு சொன்னீங்கன்னா, நான் அவங்களிடம் பேசி பார்க்கிறேன்......."
சிக்கில் சிங்காரம் யோசித்துவிட்டு, "வேண்டாங்க! நான் வையாபுரி செட்டியாரை பார்த்து பேசிக்கிறேன்....." எனக்கூறி, கதவை திறந்துவிட்டு, அவரை காரிலிருந்து இறக்கிவிட்டு, கடைத்தெருவுக்கு காரை திருப்பினார்!
கடைத்தெருவுக்கு போவதற்குமுன், ஒரு ஓட்டலுக்குச் சென்றார், சிங்காரம். அவருக்கு, வையாபுரி செட்டியாரிடம் என்ன பேசுவது, என்பது பற்றி, யோசிக்க அவகாசம் தேவைப்பட்டது.
சற்றுமுன் கிடைத்த தகவலின்படி, வடிவழகியின் குடும்பம் பண ஆசைக்கு மசியக்கூடியவர்கள் அல்ல என்று ஊகிக்க முடிந்தது.
எப்படியாவது, இந்த ஊரிலிருந்து நகர்த்தி, சென்னை போன்ற நகரத்துக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஆடம்பரமான, வசதியான வாழ்வைக் காட்டி, மனதை மாற்ற வழி பிறக்குமா என முயற்சி செய்தாகவேண்டும், என ஊகித்தார்.
சரி, எதைச் சொல்லி அவர்களை சென்னைக்கு வர சம்மதிக்கவைப்பது?
இரண்டு வழிகள்: ஒன்று, வடிவழகியின் வாழ்க்கை துணைவனாக, சென்னையிலுள்ள பணக்கார வாலிபன் ஆசைப்படுகிறான் என ஆசை காட்டுவது, இரண்டு, வடிவழகியை கல்லூரியில் சேர்த்து நிறைய படிக்கவைத்து, பெரிய அறிவாளியாக்கும் ஆசையை காட்டுவது.