" சொல்லுங்க!"
" என்னை தன் இஷ்டத்துக்கு எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்க, அவருக்கு முழு உரிமை இருந்தாலும், இந்த நிமிடம் வரை, அவர் விரல்கூட என்மீது படவில்லை, நம்பறீங்களா?"
அத்தையும் தர்மராசனும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
" அவங்க நம்பமாட்டாங்க, ராணி! நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! அவன்தான் பக்குவப்படாதவன்னு தள்ளினாலும், என் கூடப்பிறந்தவகூட என்னை சந்தேகப்பட்டு விட்டதை நினைக்கிறபோது, என் உயிரையே மாய்த்துக்கொள்ளத் தோன்றுகிறது, ராணி!"
தந்தையின் குரல் கேட்டு தர்மராசன் திடுக்கிட்டான்.
டூரிலிருந்து திரும்பி வீட்டுக்குள் நுழைந்தவனை இருவரும் எப்படி கவனிக்கத் தவறினோம் என வியந்தனர்!
" சிவராமா! தப்பு தான்டா! அவசரப்பட்டுவிட்டேன். கோவிச்சுக்காதேடா!"
" நான் மறுமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கு நீயும் ஒரு காரணம்! ஆச்சரியப்படாதே! நான் அப்படி செய்து வேறொருத்தி இந்த வீட்டுக்கு வந்தபின், அவள் உன்னை இந்த வீட்டிலிருந்து விரட்டிவிடுவாளோ என்கிற பயம், அக்கா! என் தர்மாவிடமிருந்து என்னை பிரித்துவிடுவாளோ என்பது மட்டுமல்ல!"
" சரிப்பா! நாங்க உன்னை தவறா நினைச்சதுக்கு மன்னிப்பு கேட்கிறோம். எங்களுடைய கவலையெல்லாம், நீ எங்களுக்கு துரோகம் செய்துவிட்டாயோ என்பதல்ல, இந்தப் பெண்ணின் வாழ்வை சீரழித்துவிட்டாயோ என்பதே! பாவம்ப்பா! இந்தப் பெண் என்னையும்விட மூன்று வயது சிறியவள்னு, அவளிடமிருந்தே அத்தை தெரிந்துகொண்டு என்னிடம் தெரிவித்தபோது, என்னால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை!"
" தர்மா! நான் உன் அப்பாடா! நீயாவது, ரத்தமும் சதையுமாக உயிரோடிருக்கிற இவளுக்காக கண்ணீர் விடறீங்க, நானோ உன்னையும் என்னையும் அனாதையாக்கிட்டு செத்துப போய்ட்டாளே மகராசி, உங்கம்மா, என்னை உயிருக்குயிராக நேசித்த உத்தமி, உத்தராவுக்காக இன்னமும் என் இதயத்தில் வேறு ஒருத்திக்கு இடம் கொடுக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். அப்படிச் செய்தால், அவளுடைய ஆன்மா கதறியழும்டா!"
தர்மராசன் அப்பாவின் காலில் விழுந்து குமுறி அழுதான்.
எத்தனை உயர்ந்த நிலையில் வாழ்கிறவரை சாக்கடையில் தள்ளிவிட்டோமே என புலம்பினான்!