" நீ சொல்வதும் சரிதான், நாம கொஞ்ச நாட்களுக்கு நாடகமாட வேண்டியதுதான்!"
" ஒண்ணு செய்வோம், அவளிடம் நாம முதல்லே, அவளுக்கு எந்தவிதமான கணவனை தேடறதுன்னு விசாரிப்போம், அடுத்தது பொருத்தமான வரனுக்காக விளம்பரம் தருவோம்! பிறகு கிடைக்கிற ஜாதகங்களை ஜோசியரிடம் காண்பித்து பொருத்தம் பார்க்கிறதா, காலம் தள்ளுவோம், இப்ப முதல்லே, அவளிடம் பேச்சை துவக்குவோம், வாங்க!"
இருவரும் சித்ராவின் அறைக்குச் சென்று கதவைத் தட்டி, திறக்கச் சொன்னார்கள்.
கதவு திறக்கப்படவுமில்லை, சித்ரா பதில் பேசவுமில்லை!
" குழந்தை தூங்கறா போலிருக்கு, பிறகு பேசுவோம்!"
இருவரும் தங்கள் காரியங்களில் மூழ்கியதில் இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை!
திடீரென தொலைக்காட்சியிலிருந்து ஒரு பெண் விக்கி விக்கி அழும் குரல் கேட்டது!
சித்ரா, தொலைக்காட்சியில் நியூஸ் தவிர, சீரியல்களையெல்லாம் வெறுத்து ஒதுக்குவாள். சித்ராவுக்கு அழுகை, சோகம், கோபம், ஆத்திரம், சண்டை, எதுவுமே பிடிக்காது. சீரியல்களிலோ, அவைகளைத் தவிர, வேறெதுவும் கிடையாது!
பின் வேறு யார் சீரியல் பார்க்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஹாலுக்கு வந்தனர், இருவரும்!
அதிர்ச்சியில் உறைந்தனர். சீரியலை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தது, சித்ரா!
ரசித்தது மட்டுமல்ல, கூடவே அவளும் விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள்.
பெற்றவர்களின் வயிற்றில் தீ பற்றி எரிந்தது!
ஓடிவந்து, சித்ராவின் இருபுறத்திலும் அமர்ந்து, முதுகில் ஆறுதலாக தடவிக் கொடுத்து, முகத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தனர்.
சித்ரா, தாயின் மடியில் முகம் புதைத்து விம்மினாள்.
" சித்ரா! ஏன் அழறேன்னு சொன்னால்தானே, எங்களுக்குப் புரியும், உனக்கு தேவையானதை செய்யமுடியும், சொல்லும்மா!"
சித்ரா, தலை நிமிர்ந்து, தாயை பார்த்துவிட்டு, கண்களை மூடி, பரவசத்தில் ஆழ்ந்தாள்.
" என்னங்க! இவளுக்கு என்னாச்சு? டாக்டரிடம் அழைத்துப் போவோமா, உடனே?"
" சித்ரா! வாயைத் திறந்து உன் மனதிலே இருக்கிறதை வெளியே கொட்டும்மா! மனசு பாரம் குறையும், எங்களுக்கும் உன் தேவை என்னன்னு தெரியும்!"
" அப்பா! எனக்கே தெரியலையேப்பா! மணிக்கணக்கிலே அழுதுண்டே இருக்கத் தோணுது, வெளியிலே எங்கேயும் போகணும், எதையும் வாங்கணும்னெல்லாம் நினைப்பே இல்லை,