என்றெல்லாம், அவள் கூறும்போது தந்தை மேகநாதன் வாய் பிளந்து வியப்புடன் சிலையாகி விடுவார்.
இப்போது புரிகிறதா, ஏன் மேகநாதன் இந்த அளவுக்கு மகளைப்பற்றி கவலைப்படுகிறார் என்று!
ரேணுகா தனக்குள் முதலில் கேட்டுக்கொண்டது:
ஏதாவது காதல் தோல்வியாக இருக்குமோ?
அவளுக்கு அதற்கெல்லாம் ஏது நேரமென, அந்தக் காரணத்தை தள்ளினாள்.
ஆசைப்பட்டது ஏதாவது அடையவில்லையே என்ற ஏக்கமா?
அவள் ஆசைப்படுவதே கிடையாதே! நினைத்தால் அதை அடைந்தபிறகுதானே உறங்குவாள்!
ஊடகங்களிலே, தொலைக்காட்சியிலே, ஏதாவது அருவருப்பான காட்சியைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டாளோ, எப்படி அதை கண்டுபிடிப்பது?
அவளிடமே பேசிப் பார்ப்போம் என முடிவு எடுத்தாள்.
" சித்ருகண்ணு! ஏன்டா இப்படி எப்போதும் மோட்டுவளையை பார்த்துண்டு,எதையோ யோசித்திண்டு, யாரிடமும் பேசாம, எதுவும் செய்யாம உட்கார்ந்திருக்கே? மனசிலே என்ன இருக்கோ, அதை எங்களிடம் சொன்னால்தானே நாங்கள் அதற்கு ஆவன செய்யமுடியும்? சொல்லுடா, சித்ருகண்ணு!"
" இத பாரு! மொதல்லே, என்னை 'சித்ருகண்ணு'ன்னு கூப்பிடறதை நிறுத்து! ரெண்டாவது என்னை வாடா, போடான்னு ஆம்பளையை கூப்படறமாதிரி கூப்பிடாதே! நான் உங்கள் முதல் பெண், முதலும் முடிவுமா ஒரே வாரிசு! உனக்கு பிள்ளைக் குழந்தை பிறக்கலையேன்னு குறையா இருந்தா, ஒரு ஆண் குழந்தையை அனாதை இல்லத்திலிருந்து எடுத்து வளர்த்துக்கோ, என்னை விடு இப்ப.......!"
சுள்ளென, மகள், தன்மீது எரிந்து விழுந்தாலும், தாய் ரேணுகா மகிழ்ச்சி அடைந்ததற்கு காரணம், எதுவுமே பேசாமல், ஊமையாக இருந்தவள், ஒரே மூச்சில், இத்தனை பேசினாளே என்று பூரித்தாள்.
அந்த நேரத்தில், மேகநாதனும் மருந்துகளுடன் வீட்டில் நுழையவே, அவரை கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.
மேகநாதனுக்கு ஏதும் புரியவில்லை!
ரேணுகா, மேகநாதன் வைத்திருந்த மருந்துகளைப் பிடுங்கி, சோபாவில் வீசினாள்.
" நம்ம பொண்ணு பேசிட்டாங்க, நிறைய பேசினாங்க, கரெக்டா பேசினாங்க, அவளுக்கு எந்த நோயும் இல்லீங்க! ஷீ இஸ் பெர்ஃபெக்டர்லி ஆல்ரைட்!"
மேகநாதனும் ஆனந்தத்தில் மிதந்தார்!