வெளியே வரும்போது மனம் கனக்கும், அந்த கனம், சுமை குறைய கொஞ்சம் நேரமாகும்......"
" அதாவது, ஈடுபாடே இல்லாம, வெறுப்பா செய்த ஒரு செயல், பிறகு, உன்னை அறியாமலே, தீவிர நெருக்கமா, நெகிழ்வோட செய்கிறே!
சித்ரா! அப்பா, அம்மா சொன்னதை கேட்டியா? எது ஒரு நேரத்திலே கசப்பாக இருந்ததோ, அதுவே பிற்காலத்திலே அமுதமாக மாறுவது, மனதினுடைய சுபாவம்! ஏன்னா, மனசுக்கு சுகம்-துக்கம் இரண்டு அனுபவங்களுமே தேவைப்படுகிறது!
உலகத்திலேயே மாறாத ஒரு விஷயம், 'மாறுதல்'தான்!
எப்படி சுகம் ஒரு அனுபவமோ, அதேபோல துக்கமும் ஒரு அனுபவம்!
முதலில் இது புரியாமல் இருக்கும், ஏன்னா அறிவு, அலசிப் பார்த்து முடிவுக்கு வர நேரம் எடுத்துக் கொள்கிறது!
சித்ரா! இப்ப உன்னை ஆட்கொண்டிருப்பதும், இந்த மாறுதல்தான்!
அதை தவிர்க்கமுடியாது. மலையிலிருந்து புறப்பட்டு வரும் ஆறு, மேடு-பள்ளம் இரண்டையும் கடந்து, வளைந்து நெளிந்து, தன் வழியை தானே அமைத்துக்கொண்டு ஓடி கடலில் கலப்பதுமாதிரி, மனசும் தன் போக்கில் மாறி மாறித்தான் செயல்படும்.
அப்போதெல்லாம், நீ மிரண்டு, அரண்டு, பயந்து, முக்காடிட்டு ஒளிய நினைக்காமல், துணிவாக நின்று அறிவின் பலத்துடன், உனக்கு வேறெதிலாவது நாட்டம் ஏற்படுத்திக் கொண்டால், மனச்சுமை இலேசாகிவிடும். 'இதுவும் கடந்துபோகும்' என்ற நம்பிக்கை பிறக்கும்......."
சித்ரா உடலை உதறிக்கொண்டாள். அதன்வாயிலாக, மனதையும்தான்!
புத்துணர்ச்சியுடன் மூவரும் இறைவனின் காலில் விழுந்து ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.
தலைநிமிர்ந்து பார்த்தபோது, அங்கே துறவியை காணவில்லை!
வாசற்கதவைப் பார்த்தனர். அது உட்புறமாக தாளிட்டபடி இருந்தது!
மூவரும் அடுத்த வினாடியே பூஜையறையில் சரண் அடைந்தனர்!