அவளை எழுப்பி மீண்டும் தன் அருகில் அமரவைத்து, துறவி ரேணுகா-மேகநாதன் தம்பதியிடம் கனிவுடன் பேசினார்.
" என்னை சித்ரா கூப்பிட்டது ஒருபுறம் இருக்கட்டும், நீங்க ரெண்டு பேரும் சற்று முன்பு என்னை கூப்பிட்டீங்களே, அது பொய்யா? நான் வரமாட்டேன் என்கிற தைரியத்திலே அழைத்தீர்களா? எதிலுமே நம்பிக்கை இல்லாம, செய்வதே பழக்கமாகிவிட்டது
இல்லையா?"
இருவரும் துறவியின் காலில் விழுந்து, " இறைவா! எங்களை மன்னிச்சிடு! எங்களாலே நம்பமுடியாம, புரிஞ்சிக்கவும் முடியாம, ஏற்கெனவே துன்பப்பட்டுக் கொண்டிருப்பதினாலே, தப்பு பண்ணிட்டோம்....."
" சரி சரி, நீங்களும் எனக்கு குழந்தைகள்தான்! நீங்கள் கூப்பிட்டவுடன் ஓடிவராமல் என்னால் இருக்க முடியுமா? உங்களைப் பெற்ற தாயம்மா, நான்!
இதிலே என்ன வேதனைன்னா, நானே சொன்னாலும் நீங்க நம்பமாட்டேங்கறதுதான், என் குழந்தைகள் வேதனைப்படும்போது, என்னால் நிம்மதியா இருக்கமுடியுமா? அதனாலேதான் ஓடிவந்துட்டேன்......"
" இறைவா! எங்களுக்கு என்ன பேசறது, என்ன செய்யறதுன்னு புரியலே, நீங்க சொன்னாமாதிரி, நம்பமுடியாம, இது கனவா, நினைவான்னு தெரியாம அல்லாடறோம்........."
" புரிகிறது, நானே பேசறேன்! என்னை முதல்லே அழைத்தது, சித்ரா தான்! குழந்தே! உனக்கு என்ன வேணும்? எதுக்கு என்னை கூப்பிட்டே?"
சித்ரா திருதிருவென விழித்தாள். பேச்சே வரவில்லை!
" சரி, குழந்தை, நீ! நானே சொல்றேன்!
காரணம் என்னன்னு தெரியாமலே, மனசிலே ஒரு இறுக்கம், ஒரு சுமை, ஒரு இனம் புரியாத குழப்பம் இருக்கா?"
சித்ரா தலையாட்டினாள்.
" இந்தமாதிரியான குழப்பம் அடிக்கடி வருமா, எப்போதாவது வருமா, இதுவரை வந்ததேயில்லையா?"
" இறைவா! அவ குழந்தை! உங்களுக்கு தெரியாத ஒன்றா?"
துறவி சிரித்தார்.
" சித்ரா! பார்த்தியா? நீ அழைக்காமலே, உன்னைப் பெற்றவங்க, உனக்கு உதவியா பேசறதை? சரி, சரி! நானே சொல்றேன்!