என் சுவாசம் பேரிரைச்சலாக என் செவிகளை எட்டுகிறது.நள்ளிரவின் நிசப்தம் கிழித்து ஒலிக்கிறது என் இதயதுடிப்பு.பாலைவனத்துக் கானல் நீரைபோல நான் கொண்ட நம்பிக்கை போகக்கூடாது.
மையழிந்த விழிகளில் உயிர் நீராய் கரைய உருட்டி திரட்டி சிமிட்டி பார்க்கிறேன்.அது ஒரு வீடு மரத்தால் ஆன வீடு.அதற்குள் பரவியிருக்கும் வெளிச்சம் மனித இருப்பை குறிப்பாக கூறினாலும் மனிதனின் ஒழுக்கங்கள் அவ்வளவு பிரகாசமானதா என்று தெரியாமல் தவிக்கிறேன்.
மெல்ல மெல்ல வெளிச்சத்தை நெருங்கி செல்ல செல்ல முழுதாக புலப்படுகிறது அந்த வீடு.சுற்றிலும் அடர்ந்த வனத்தின் நடுவில் அமைந்திருக்கும் அது ஒருவேளை என் பிரமையா????
இல்லை அப்படி இருக்க வேண்டாம்.அருகே வந்துவிட்டேனெனினும் பயம் வானோக்கி பயணிக்கும் வானூர்தியென கிளம்பியது.
அந்த மரவீட்டில் காற்றுவீசும் ஓசைத்தவிர பரவிக்கிடந்த நிசப்தம் உதவிக்கோர வழியிருப்பதாக தெரியவில்லை.அப்படி இருப்பினும் நானிருக்கும் கோலம் என்னை ரட்சிக்க என்னாலே முடியாத நிலை என்ன செய்யப்போகிறேன் என்ற கேள்விக்குறி எனக்கு முன் அந்த வீட்டினுள் நுழைந்திருந்தது.
ஒருவழியாக சில மரப்படிகளில் ஏறி அந்த வீட்டினுள் பிரவேசித்தேன்.என் சுவாசத்தின் சத்தம் என் முகத்தில் அடிக்குமளவு மயான அமைதி.இங்கு இப்படி இல்லையென்றால் மட்டுமே ஆச்சர்யம்.ஒருவேளை இங்கு யாரும் இல்லையேனென்றாலும் ஏதேனும் எனக்கு உதவும் விதமாக இருக்க கூடுமென்று பார்த்தேன்.ஒற்றை அறையோடு நான்கு மரத்தூண்களே கொண்ட அந்த இடத்தில் சில மரத்துண்டுகள்மட்டுமே இருந்த இடம் என் மனதினை போன்று வெறுமையில் நிரம்பியிருந்தது.
யவரி நுவ்வு?(யார் நீ)????
கோடைகாலத்தில் கார்மேகங்கள் சூழ்ந்து பொழிய தயாராகும் நேரம் விண்ணைப் பிளக்கும் கோடை இடியொத்த அந்த குரலினால் இருதயம் இடைநிறுத்தம் செய்தது போல் மூச்சடைத்தது.எங்கிருந்து வந்ததென்று தெரியாமல் விழிக்க மீண்டும் அதே குரல் என் பின்புறத்திலிருந்து.
யாதும் செய்யும் திராணியற்ற நிராயுதபாணியாக அங்கங்கள் மறைக்கும் வழியின்றி தரையில் அப்படியே அமர்ந்து கால்களை மார்போடு குறுக்கி அணைத்துக் கொண்டு தலை கவிழ்ந்து அமர்ந்தேன்.