சிறுகதை - குடை சொன்ன கதை - ரவை
" குடை எப்படி கதை சொல்லும்?" என்று வினா, எழுப்புகிறவர்களுக்கு, என் பதில் இதுதான்!
அதிசயங்கள் நித்தநித்தம் நடக்கத்தான் செய்கின்றன!
இன்றும் நடக்கிறது, பல ஆண்டுகள் முன்பும் நடந்தன!
இன்றைய செய்தித்தாள் கூறவில்லையா? 'விமானம் கீழே விழுந்து நொறுங்கி அதில் பயணித்த நூறு பேரில் ஒரே ஒருவரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் பலி!
அந்த ஒருவருக்கு சிறு காயம்கூட ஏற்படாத மர்மம், அதிசயமாக உள்ளது!'
அந்தக் காலத்து அதிசயம் ஒன்றை, சொல்றேன், எனக்குத் தெரிந்தது, எங்க 'ஐயா'வை பற்றியது!
எல்லாரும் அவரை 'ஐயா'ன்னு அழைக்கிறதைப் பார்த்து, நானும் அவரை அது போல அழைக்கிறேன்.
என்னை நேசித்து உடன் வைத்து, பல வருஷங்களாக காப்பாற்றுகிறாரே, பள்ளி ஆசிரியர் இளையராஜாவுக்கு அப்போது ஒரு வயது!
குடிசைக்குள் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார். கடும் சூறாவளிக் காற்றில், குடிசை ஐம்பதடி மேலே வானில் பறந்து, நூறடி தள்ளி ஒரு வயற்பரப்பில், தொட்டில் விழுந்தது.
குழந்தையை காணாமல் தேடி, இறுதியில் வயற்பரப்பில் விழுந்திருந்த குடிசையின் கூரையை அகற்றிப் பார்த்தபோது, அங்கே தொட்டிலில் குழந்தை அழுதுகொண்டு இருந்தது, ஒரு சிறு காயமும் இல்லாமல்!
இப்படி அதிசயங்கள் நடப்பதை நம்பாவிட்டால், என் சுய அனுபவத்தைச் சொல்கிறேன், கேளுங்கள்!
ஒருநாள், என்னை வளர்ப்பவர், தெருவில் ஏதோ நினைவுகளில் மூழ்கி நடந்து கொண்டிருந்தபோது, ஒரு கொம்புள்ள காளைஅவரை தாக்க ஓடிவந்த போது , அவர் அதை அறியவில்லை. ஒரே ஒரு வினாடி தாமதித்திருந்து இருந்தால், அவரை காளை தன் கொம்பால் வயிற்றில் குத்தி கொன்றிருக்கும்!
அவரை கேட்காமலே, அவர் கையிலிருந்த நான், பாய்ந்து, அந்தக் காளையை முகத்தில் என் கூர்மையான காலால் குத்தினேன். பயந்து அந்தக் காளை வேறுவழி சென்றது!
இந்த அதிசயத்தை, என் 'ஐயா', நம்பமுடியாமல், டாக்டரிடம், 'இது எப்படி சாத்தியம்?' என்று கேட்டார். அதற்கு டாக்டர், ஏதோ 'ஆட்டோ ரியாக்ஷன்'னு விளக்கினார்.
என் 'ஐயா', ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர். முதல் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ் பாடம் சொல்லிக் கொடுப்பார்.
நான் அதை தினமும் கேட்டு ரசிப்பேன். எப்படி? என கேட்கிறீர்களா?