" ஆமாம், கோபமே வராதே, உங்களுக்கு, ஏன் இப்ப எரிமலையா நெருப்பை கொட்டினீங்க?"
" அது வந்து, ஒரு ஏழை பசியிலே வாடறதை என்னால் சகிச்சுக்க முடியலே......"
" அதுக்காக, என்ன, ஏது என்று எங்களை விசாரிக்காம அவ சொன்னதையே வேத வாக்கா எடுத்துண்டு தாம்தூம் னு குதிக்கிறதா?"
" சரி, சொல்லு!" " வேலைக்காரி வந்தா, அவளை விசாரிச்சோம், அவ தனக்கு நோய் வந்ததா சொன்னவுடனே, இப்ப குணம் ஆயிடுத்தான்னு கேட்டோம், ஆயிடுத்துன்னா, ஆஸ்பத்திரி யிலே எழுதிக் கொடுத்ததை காட்டுன்னு கேட்டோம், அவ தன்னிடம் பேப்பர் ஒண்ணும் தரலேன்னு சொன்னா, எனக்கு ஒரு சந்தேகம் வந்துது, ஒருவேளை சிகிச்சை முடியறதுக்குமுன் இவ ஓடிவந்துட்டாளோன்னு!
அதனாலே, அந்த ஆஸ்பத்திரி சீட்டை வாங்கி வரச் சொன்னேன்,
அவளுக்கு, ஒருவேளை பயம் வந்துதோ என்னவோ, அவளை வேலைக்கு வைச்சிக்க மாட் டோமோன்னு!
அதனாலே,திரும்பி போய்ட்டு, உங்களிடம் அழுது இருக்கா, நீங்க உடனே அதை அப்படியே நம்பி, நரசிம்ம அவதாரம் எடுத்து விட்டீங்க!
இத்தனை வருஷம் உங்களை வளர்த்து ஆளாக்கின அப்பா, அம்மா, இருபது வருஷமா உங்க மனைவியா வாழற என்னை சந்தேகப்பட்டு சத்தம் போட்டீங்களே, நியாயமா?"
" மன்னிச்சிடுங்கப்பா! மன்னிச்சிடுங்கம்மா! அந்த வேலைக்காரி, நம்மவீட்டு வாசல்லே நின்னு அழுதபோது என்னை மறந்து, கோபத்துக்கு இரையாகி விட்டேன்....தப்புதான்"
" அவ்வளவு சுலபமா விட முடியாது, நீங்க இப்பவே போய், அவளை விசாரித்து உண்மையை தெரிந்துவாங்க! போங்க!"
தலை குனிந்து, அப்பா வெளியேறினார்.
"மீனாட்சி! உன் புருஷன் ரொம்ப இளகின மனசுள்ளவம்மா! அவனுக்கு பிறர் கஷ்டப்பா, தாங்கிக்க முடியாது! அதனாலே தன்னை மறந்து கோபத்துக்கு இரை ஆயிட்டான்,
அது சரி, அதுக்காக நீ, ஏட்டிக்குப் போட்டியா, அவனை வெளியே விரட்டினே? பாவம்! பசியோட வந்திருப்பான், வேலை முடிந்து!"
" தப்புதான், நானும் கோபத்திலே தப்பு செய்து விட்டேன், மன்னிச்சிடுங்க!"
வெளியே போன அப்பா, திரும்பிவர, வெகு நேரமாகவே, எல்லோருக்கும் கவலை வந்துவிட்டது!
அம்மா பூஜை அறையில் அழுது தவித்தாள்.
இரவு எட்டு மணிக்கு அப்பா தளர்ந்து களைப்புடன் திரும்பினார்.