சிறுகதை - வாஸ்து க்ருஹலக்ஷ்மி - ஜெய்
“கிரு என்னாச்சுடி.... ஏன் இப்படி கப்பல் கவுந்தா மாதிரி கன்னத்துல கையை வச்சுண்டு உட்கார்ந்திருக்க,,,”, வீட்டு ஹாலில் உலகத்தில் இருக்கும் சோகம் அனைத்தையும் தன்னுள் அடக்கி இருப்பவள் போல் அமர்ந்திருந்த க்ருஹலக்ஷ்மியைப் பார்த்து கேட்டாள் அவளின் பக்கத்து வீட்டு சுப்புலக்ஷ்மி என்கிற சுப்பு மாமி....
“ஹ்ம்ம் ஒரு நாலைஞ்சு மாசமா ஆத்துல நடக்கறது ஒண்ணும் சரியே இல்லை சுப்பு மாமி...”
“என்னடி சொல்ற.... நீ இப்படி கவலைப்படற அளவுக்கு அப்படி என்னதான் ஆச்சு....”
“ஒண்ணா, ரெண்டா எதை சொல்ல....”
“KB சுந்தராம்பாள் மாதிரி ஒன்றானவன்னு பாட்டை இழுக்காம, சீக்கிரமா விஷயத்துக்கு வாடி....”
“மாமி... நாலு மாசத்துக்கு முன்னாடி கோவிலுக்கு போன என்னோட மாமியார் கீழ விழுந்து கை முறிஞ்சு போச்சுன்னு நான் சொன்னேன் இல்லை....”
“அதை நீ சந்தோஷமாத்தானேடி சொன்ன...”, சுப்பு மாமி சொல்ல க்ருஹா மாமியை முறைத்தாள்...
“சரி சரி ஏதோ ஒரு flowல வந்துடுத்து.... நீ மேல சொல்லு....”
“அப்போ ஆரம்பிச்சுது மாமி... வரிசையா ஏதோ வேண்டாததே நடக்கறது...”, அவளின் பில்ட்அப்பை பார்த்து இவள் சொல்லி முடிக்க மாமாங்கம் ஆகும் என்று அதுவரை நின்றுகொண்டே பேசிய மாமி, அவளின் அருகில் அமர்ந்தார்.
“மொதல்ல மாமியார் அப்பறம் இவர்க்கு உடம்புக்கு வந்தது....”
“ஏண்டி மனுஷான்னு இருந்தா உடம்புக்கு வராதா.... வரதனுக்கு வந்தது சாதாரண ஜுரம்... அதைப்போய் பெரிசா நினைச்சு கவலைப்படற....”
“பத்து நாள் கண்ணைத்திறக்காம அவர் படுத்துண்டு இருந்தது உங்களுக்கு சாதாரணமா... மொதல்ல ஜுரம் அப்பறம் வாந்தி, பேதின்னு எத்தனை கஷடப்பட்டார்....”
“சாதாரண ஜுரத்தை அசாதாரணமா ஆக்கினது நீதாண்டி.... கை வைத்தியம்ங்கற பேருல கஷாயத்தை காய்ச்சி கொடுத்து ரெண்டு நாள்ல சரியாப்போறதை பத்து நாளுக்கு இழுத்து விட்ட....”
“சரி அதுதான் போறது விடுங்கோ.... அது முடிஞ்சு அவருக்கு வரவேண்டிய ப்ரொமோஷன் அது வராமையே போச்சு... உங்களுக்கே தெரியும் இவர் ராவா பகலா அந்த கம்பெனிக்கு எப்படி உழைச்சுக் கொட்டறார்ன்னு…”, உன்னோட தொல்லைலேர்ந்து தப்பிக்க அவன் ஊரை சுத்திட்டு மெதுவா வரான், நீ என்னமோ கம்பெனில இருக்கான்னு நினைச்சுண்டு இருக்க, மனதிற்குள் அவளுக்கு கவுன்ட்டர் கொடுத்தபடியே வெளியில் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டார்