“சரி மாமி... உங்க சிநேகிதி எப்போ சொல்லுவா....”
“இன்னும் கொஞ்ச நேரத்துல போன் பண்றேன்னு சொன்னா.... அவ பண்ணின உடனே நோக்கு சொல்றேன்... மாமாக்கு காப்பிக்கு டைம் ஆச்சு.... நான் கிளம்பறேன்....நோக்கும் குழந்தைகள் வர்ற டைம் ஆறதே வேலையைப்பார்...”, சுப்பு மாமி கிளம்ப, க்ருஹாவும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்ய சமையலறை சென்றாள்.
சனிக்கிழமை காலை வீட்டிற்குள் நுழைந்த வரதன் வீடே அமைதியில் மூழ்கி இருக்க பீதியுடனேயே ஹாலிற்கு வந்தான்.... சாதாரணமாக க்ருஹா ஒரு பக்கம் கத்த குழந்தைகள் மறுபக்கம் கத்த என்று, படு ஜகத்ஜோதியாக இருக்கும் வீடு இன்று ஏதோ தியான மண்டபமாக காட்சி அளிக்க புயலுக்கு முன்னே வரும் அமைதியாக அது வரதனின் வயிற்றைப் புரட்டியது....
“ஓ வந்துட்டேளா.... ஜெர்னி comfortable இருந்துதா.... உக்காருங்கோ காபி எடுத்துண்டு வரேன்...”,அடுத்த அதிர்ச்சி வரதனுக்கு... இத்தனை அமைதியாக பதவிசாக பேசுவது தன் பத்தினிதானா என்று...
உள்ளூர் கடவுள் முதல் உலகக் கடவுள் வரை ஜாதி மத பேதமின்றி அத்தனை பேருக்கும் எதுவும் பெரிய விஷயமாக இருக்கக்கூடாது என்று அவசர வேண்டுதல் வைத்தான் வரதன்....
“காப்பி எடுத்துக்கோங்கோ... பெங்களூர்ல சாப்பாடு சரியில்லையா... ஏன் இப்படி இளைச்சு போய் வந்திருக்கேள்....”
“லட்சும்மா உனக்கு என்னாச்சு.... ஏன் இப்படி எல்லாம் பேசற... ஏதானும் பெரிசா எனக்கு ஆப்பு வச்சுட்டியா... எதா இருந்தாலும் சொல்லிடு... நீ இப்படி பதவிசா பேசறது பீதியை கிளப்பறது... ஆமா ஆம் ஏன் இத்தனை அமைதியா இருக்கு... குழந்தைகள் எங்க...”
“அச்சோ என்னன்னா ஆப்பு கீப்புன்னு அச்சான்யமா பேசிண்டு....”, ஆப்புதாண்டி அச்சான்யம், கீப்பு பரம சுகம், என்று மனதிற்குள்ளே நினைத்தான் வரதன்... வெளியில் சொன்னால் அம்பியாக ஆக்ட் கொடுக்கும் க்ருஹா அந்நியனாக நிஜத் தோற்றத்திற்கு மாறிவிடுவாள் என்று தெரிந்ததால்....
“குழந்தைகள் ரெண்டாம் மாடில சரோஜா ஆத்துக்கு விளையாட போய் இருக்கா... ஏன்னா, அடுத்த வாரம் நீங்க ஒரு ரெண்டு நாள் லீவ் எடுக்க முடியுமா...”
“இப்போதான் பெங்களூர் போயிட்டு வரேன்... அடுத்த வாரம் முழுக்க எனக்கு அந்த ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணவே நேரம் சரியா இருக்கும்... லீவ் எடுக்கறதெல்லாம் முடியவே முடியாது...”
“நேக்கு நன்னாத் தெரியும்... நான் எது கேட்டாலும் உடனே முடியாதுன்னுதான் சொல்லுவேள்ன்னு... கல்யாணம் ஆன நாள்லேர்ந்து இதுதானே நடக்கறது... நான் ஒண்ணு கேட்டு எது இந்தாத்துல நடந்திருக்கு...”