”அப்ப சொல்லு இதுல இன்னும் என்ன எழுதியிருக்கு”
”என்னவா கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை இந்த முறை உன்கூட உன் வீட்ல இருந்து கொண்டாடனும்னு ஆசைப்படறாராம் உன் புள்ளை இல்லை இல்லை உன் பேரன் அவன் பேரு கூட”
”கதிரேசன்”
”சரியா சொன்ன இப்ப நான் கிளம்பறேன் ஆளை விடு“ என சொல்லிய ராபர்ட் சட்டென அங்கிருந்து வேகமாக தன் வீட்டிற்குள் சென்றுவிட கதிரேசனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
இந்த புதிய உறவை ஏற்கலாமா வேண்டாமா என்றுதான் பலமாக யோசித்தபடியே வீடு வந்து சேர கமலாவோ ஆர்வமாக காத்திருந்தார், கணவர் வந்ததும் அவர் கையில் இருந்த லெட்டரை அவருக்கே தெரியாமல் வெடுக்கென பிடுங்கிக் கொண்டு ஓடினார். அதைக் கண்ட கதிரேசனுக்கு சிரிப்பாக இருந்தது, 5 வருடம் கழித்து கலகலவென சிரித்தவர் சில நொடிகள் கழித்து அமைதியாகிப் போனார். ராபர்ட் சொன்ன விசயங்கள் அவரை அலைக்கழித்தது. பலத்த சிந்தனையுடனே அந்த நாளை ஓட்டினார்.
மறுநாள் கமலாவோ ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் பலகாரங்கள் செய்யலானார். அதைக் கண்ட கதிரேசனோ
”எதுக்கு இப்ப பலகாரம்லாம்“
”பண்டிகை வருதுல்ல“
”இப்ப எந்த பண்டிகை வருது, பொங்கல் கூட அடுத்த மாசம்தானே”
”அது இல்லைங்க இப்ப ஒண்ணு வருமேங்க ராபர்ட்கூட கொண்டாடுவானே“