நான்கு வயதான ரோஹினியும், ஏழு வயதான ராஜாவும், அவள் ஆசிரியையாக பணி புரியும் அதே பள்ளியில் படிக்கின்றனர். அவளுடைய கணவன் வெளிநாடு சென்று இரண்டு வருடங்களாகி விட்டது... அவன் வேலை செய்த நிறுவனத்தில் நிரந்தர பணியும் கிடைத்திருந்தது... குடும்பத்தை அங்கே அழைத்து செல்ல வழி இருந்தாலும், குடும்பத்திற்கு கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கும் எண்ணத்தில் அவன் இன்னும் சில மாதங்கள் குடும்பத்தை பிரிந்திருக்க திட்டமிட்டிருந்தான்...
ஜோவிதாவிற்கு அவனின் எண்ணம் புரியாமல் இல்லை ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பது அவளின் எண்ணம். அவர்களுக்கு என்று சென்னையில் ஒரு வீடு இருந்தது, ஊரில் சில நிலங்களும் இருக்கின்றன, கடன் என்று எதுவுமில்லை. எனவே பணம் சேமிப்பதை விட குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருப்பதே நல்லது என அவள் நினைத்தாள். ஒரு மாதமாகவே இருவரும் இதை பற்றி பேசி பேசி, விவாதித்து விவாதித்து, இறுதியில் சண்டையில் வந்து முடிந்திருந்தது.
கணவனின் அன்பில் அவளுக்கு சிறு சந்தேகமும் இல்லை... அவர்களை பிரிந்திருப்பது அவனுக்கு கடினமானது தான்... அவர்களின் எதிர்காலத்திற்காக தான் அவன் இதை சொல்கிறான் என்பதும் அவளுக்கு புரிந்தது... ஆனால் ஏற்றுக் கொள்ள தான் மனம் வரவில்லை. ‘நாளை’யை மட்டுமே நினைத்து இன்றைய பொழுதை இழப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை... சேமிப்பது நல்லது தான் ஆனால் தேவைக்கு அதிகமாக சேமிப்பது தேவையா என்று அவளுக்கு புரியவில்லை...
மற்றைய தினங்களிலும், பள்ளியில் நடக்கும் விளையாட்டு தினம், ஆண்டு விழா போன்ற நிகழ்ச்சிகளிலும் ரோஹினிக்கும், ராஜாவிற்கும் அவனின் பிரிவு எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது அவளுக்கு தெரியும்...
அவளுடைய கணவனுக்கும் அவர்களின் மூன்று பேரின் மீது அதீத அன்பு இருந்தது... அவனுக்கும் கஷ்டம், இங்கே இவர்களுக்கும் வருத்தம், பிறகு பணத்தை மட்டும் நினைத்துக் கொண்டு என்ன செய்வது?