பேருந்தில் செல்லும் வழி எல்லாம் மனதில் இதே நினைவோடு பயணம் செய்தவள், மாலையில் அவனுடன் பேச வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டாள்.
மாலை ஆறு மணி அளவில் தொலைபேசி ஒலி எழுப்பியது. மொபைலில் அல்லாது லேன்ட்லைனில் அழைப்பது அவன் தான் என்பது தெரிந்திருந்தப் படியால் அவளுக்கு முன்பே ராஜா ஓடி சென்று போனை எடுத்து பேசினான். ஒரு வாரமாக பள்ளியில் நடந்த கதைகளை அவன் சொல்லி முடித்து, ரோஹினியையும் பேச விட்டு விட்டு, கடைசியாக ஒரு வழியாக ஜோவிதாவிடம் அந்த கார்ட்லெஸ் போனை கொண்டு வந்து தந்தான்.
மன்னிப்பு சொல்லி ஆரம்பிப்பதா அல்லது இயல்பாக பேசுவதா என்று அவள் யோசிக்கும் போதே,
“நீ கேட்டது போல், நீ ஆசை பட்டதையே உனக்கு தரலாம்னு முடிவு செய்துட்டேன்... எல்லா பேப்பரையும் என் பிரெண்டோட மனைவியிடம் கொடுத்திருக்கேன்... ஸ்கூலுக்கே வந்து தருவாங்க... அவங்க என் க்ளோஸ் பிரெண்டோட வைப், தயவு செய்து சீன் எதுவும் க்ரியேட் செய்யாதே... பேப்பர் எல்லாம் பார்த்துட்டு இன்னும் ஏதாவது சேன்ஜ் செய்யனும்னா சொல்லு...”
அத்துடன் அந்த பக்கம் இணைப்பு துண்டிக்கப் பட்டதற்கான அடையாளமாக கீங் கீங் என்னும் ஒலி எழுந்தது. இல்லையென்றாலும் அவளால் பேச முடிந்திருக்குமா என்று தெரியவில்லை.
அவ்வளவு தானா? இத்தனை எளிதான விஷயம் தானா இது? பத்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இவ்வளவு தானா?
அன்புச்செல்வன் சொன்ன அவனின் நண்பனின் மனைவி லக்ஷ்மி அடுத்த நாளே அவளை பள்ளியில் வந்து சந்தித்தாள்.
“உங்களை பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கேன், இப்போ தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது...”
பதிலுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் புன்னகையை பதிலாக கொடுத்தாள் ஜோவிதா.