லக்ஷ்மி, தன் கைப்பையில் வைத்திருந்த அந்த பெரிய கடித உரையை எடுத்து கொடுத்தாள். அதில் என்ன இருக்கும் என்பது புரிந்ததால் ஜோவிதாவின் முகம் தானாக வாடியது.
“உங்க கணவர் சொன்னார், உங்களுக்கு இந்த வேலை மீது ரொம்ப ஈடுபாடுன்னு, ஆனாலும் இப்படியா? யோசித்து பார்த்தால் அவர் எடுத்திருக்கும் முடிவும் சரி தான்...”
அவன் இவர்களிடம் என்ன சொல்லி இருக்கிறானோ? மற்றபடியும் அவன் போனில் சொன்னது நினைவு வர, மனதை கட்டுபடுத்தி, புன்னகைக்க முயன்றாள் அவள்.
“இன்னும் ஒரு வாரத்தில் அவரே வர போகிறாரே அப்புறம் ஏன் நான் நடுவில் இங்கேன்னு நினைத்தேன்... ஒருவேளை நீங்க பீல் செய்வீங்கன்னு தான் என்னிடம் சொன்னார் போலும்...”
“ஒரு வாரத்தில் அன்பு இங்கே சென்னை வருகிறாரா?”
நம்ப முடியாமல் அவள் தடுமாற, அவளை ஆச்சர்யமாக பார்த்த லக்ஷ்மி,
“உங்களுக்கு தெரியாதா? ஒருவேளை உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைத்திருப்பாரோ? நான் தான் உளறிட்டேனா? சாரிங்க... ஸ்கூல் அட்மிஷனுக்கு எல்லாம ரெடி செய்யனுமே அது தான் இப்போதே வருகிறார்...”
ஸ்கூல் அட்மிஷன்?
குழந்தைகளையும் அழைத்து செல்ல போகிறானா?
அடுத்த ஒரு வாரம் எப்படி ஓடியது என்றே ஜோவிதாவிற்கு புரியவில்லை. இன்று இரவு அன்புச்செல்வன் சென்னை வந்து சேர்கிறான்... விமான நிலையத்திற்கு போகாமல் இருந்து விடலாமா என்று நினைத்தவளுக்கு மனம் வரவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவனை நேரில் பார்க்க கிடைக்கும் வாய்ப்பை தவற விட தோன்றவில்லை... இதற்கு பின் அவனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ!