சுனிலும் சமீனாவும் கல்யாணத்தைப் பற்றியோ மதம் மாறுவது பற்றியோ அல்லது தங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை எப்படித் தீர்ப்பது என்றோ ஒரு நாளும் சிந்தித்ததில்லை.
புத்த மதத்தில் ஊறிப் போயிருக்கும் சுனிலின் பெற்றோரும், இஸ்லாம் மதத்தை நம்பியிருக்கும் அவளது பெற்றோரும் எப்படித்தான் அவர்கள் கல்யாணத்துக்குச் சம்மதிப்பார்கள்?
யார் முதலில் கல்யாணத்தைப் பற்றி பேசுவது? என்ற தடுமாற்றம்!
நாட்கள் நகர்கின்றன………………….
சுனிலிடம் இருந்து டெலிபோன் வருகிறது “எனக்கு துபாயில் வேலை கிடைத்திருக்கிறது. இன்னும் இரண்டு கிழமைகளில் துபாய்க்கு வந்து விடுவேன்” என்று கூறினான்.
சுனிலின் முடிவு அவள் எதிர்பார்க்காதது. வங்கி அதிகாரியாக இருந்து விட்டு ஹோட்டல் சேர்வராக வருவது எவ்வளவு முட்டாள்தனம்? அவளால் அவனது வாழ்க்கை கெட்டு விடுமோ என்று அவள் பயந்தாள்.
சுனில் வேலைக்குச் சேர்ந்து மூன்று நாட்கள்தான் ஆகிறது. இன்னும் சமீனாவை சந்திக்கப் போகவில்லை.
வேலைப்பயிற்ச்சியில் நேரம் போனதே தெரியவில்லை. நாளை விடுமுறை சமீனாவைப் பார்க்க கட்டாயம் போக வேண்டும்.
பெனெடிக்ட் அவனுடைய மேற்பார்வையாளன். ஸ்ரீ லங்காவில் அவன் நண்பனும் கூட. அவன்தான் இந்த வேலையை சுனிலுக்கு எடுத்துக் கொடுத்தவன். அவன் சுனிலை ஒருபக்கம் அழைத்து "சுனில் இன்றைக்கு ஒரு முக்கியமான வாடிக்கையாளர் ஏழு மணிக்குச் சாப்பிட வருகிறார். நீதான் அவருக்கு பரிமாற வேண்டும்" "அவர் ஒரு வங்கியில் பங்காளி அவர்களை நன்றாகக் கவனி. நான் இரண்டு கதிரைகள் பத்தாவது மேசையில் ஒழுங்கு செய்திருக்கிறேன்" என்றான்.
சுனில் ஏழு மணிக்கு முன்னரே பத்தாவது இலக்க மேசையை நோக்கிப் போகிறான் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறான்.
ஏழு மணிக்கு பெனெடிக்ட் ஒரு அரேபிய உடையிலிருந்த ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்துக்கொண்டு வந்தான்.
சுனிலை அவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு அங்கிருந்து போய்விட்டான்.
சுனில் அவர்களிடம் என்ன குடிக்கப் போகிறீர்கள் என்று பணிவாகக் கேட்டான். அவர் ஒரு விலைஉயர்ந்த விஸ்கியும், அவள் ஒரு ஆரஞ்சு ஜூசும் கேட்டார்கள்.
அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்து, ஆங்கிலத்தில் உரையாடினார்கள். நன்றாகச் சாப்பிட்டார்கள். தாராளமாக டிப்சை கொடுத்துவிட்டு, அவர்கள் போக எட்டு மணியாகி விட்டது. அவள் முகத்தை அரை குறையாக மூடியிருந்தாள். பார்க்க முடியவில்லை. அவளின் குரலைக் கேட்டால் அரேபியப் பெண்ணின் குரல் போல் இல்லை..
பெனெடிக்ட் சந்தோசமாக அவனிடம் வந்தான் அவனைப் பாராட்டி நன்றி தெரிவித்தான். “அவருக்கு உனது சேவை நன்றாகப் பிடித்து விட்டது”
நாளைக்கு இதை சமீனாவுக்கு சொல்லவேண்டும் என்று மனதில் நினைத்தான். அவள் என்னைப்பற்றி பெருமைப்படுவாள்!.
அடுத்த நாள் எப்போது வரும் என்று ஆவலாகக் காத்திருந்து அவள் வீட்டை அடைந்தான். புத்தம் புதிய இருபதாவது மாடிக்கட்டிடத்தில் அவளிருப்பது ஒரு பென்ட் ஹவுஸ். அவள் இருக்கும் நிலையை நினைக்க அவனுக்குப் பெருமையாக இருந்தது.
அந்தப் பெரியவீட்டில் அவள் ஒருத்தியா இருக்கிறாள்? என்று மனதில் எண்ணிக்கொண்டு கதவுமணியை அடித்தான்.
அவள் கதவைத் திறந்தாள். அவனை வரவேற்றாள். இருவரும் இறுகத் தழுவிக்கொண்டார்கள். நீண்டநாள் பிரிவு அவர்கள் அணைப்பிலே தெரிந்தது!.
க்ரிஸ்டல் கிளாசில் ஆப்பிள் ஜூஸ் பரிமாறினாள். அரைமணி நேரம் அவர்கள் பலதும் பேசினார்கள்.
கலியாணப் பேச்சு வந்தது. அவளுக்கு அதைப்பற்றி பேச மனமில்லை.
"சுனில் நீ முஸ்லிமாக மாறாவிட்டால் நாங்கள் கலியாணம் செய்ய முடியாது” என்று சொன்னாள்.
சுனிலுக்கு ஆச்சரியமாகவும் அது ஒரு அதிர்ச்சியாகவும் இருந்தது. அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மதம் ஒருஉண்மையான காரணமா? அல்லது அவளுக்கு தன்மேல் இருந்த காதல் மாறிவிட்டதா? அல்லது வேறு யாரிலும் உள்ள நட்பால் அவள் கூறும் சாக்கா?
நான் இவ்வளவு தியாகங்கள் செய்து துபாய்க்கு வந்தது இதைக் கேட்கவா?
தனது உணர்வுகளைக் காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து புறப்படத் தயாரானான்.
ஸ்ரீ லங்காவிருந்து அவளுக்காகக் கொண்டு வந்த அல்வாவின் ஞாபகம் வந்தது அதை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
"சாப்பிட்டு விட்டு போ சுனில்" என்று வற்புருத்தினாள். அவனுக்கு மறுக்க முடியவில்லை. ஆனால் சாப்பிடுவதற்கு பசி இல்லை!