(Reading time: 26 - 51 minutes)

நான் ஒரு பெண்ணை லவ் பண்ணுறேன் ரிஷி” என்று சரித்திரன் சொன்னது அவளுக்கு நினைவு வரும். அடுத்த ஒரு நொடியே சரியாகி விடுவாள் அவள். “சரித்திரன் இப்போது வேறு ஒருத்தியின் மணாளன். அவனை நினைப்பது தவறு” என்று தனக்கே சொல்லிக் கொள்வாள். சரித்திரனுக்கு பங்கீ ஜம்பிங்  போதையெனில், ஆதர்ஷினிக்கு இது தடுப்பு ஊசி!

முகம் மறைத்த கூந்தலை அவள் குதிரை வாலாக கட்டிக் கொண்ட தருணம் அவளது முகத்தைப் பார்த்திருந்தான் சரித்திரன். “ ரிஷி..என் ரிஷி” என்று அவன் ஓசை வராமல் முணுமுணுத்தது அவளை எட்டியிருக்க சட்டென திரும்பினாள் ஆதர்ஷினி. அவனோ அவள் தனது முகத்தை பார்க்கும் கடைசி நொடியில் அவள் பக்கம் முதுகு காட்டி நின்றுக் கொண்டான். அவன் கைகளில் அவளது பெயர் எழுதப்பட்ட விண்ணப்ப பாரம் சிக்கியது. அந்த இடத்தின் விதிமுறைகளின் படி, பங்கீ ஜம்பிங்கிற்கு முன், ஒவ்வொருவரும் தங்களது விவரங்களை விண்ணப்ப பாரத்தில் பூர்த்தி செய்து தர வேண்டும். அந்த சூழ்நிலையிலும் அவள் பெயர் “மிஸ்” என்று இருப்பதை கவனிக்கத் தவறவில்லை அவன்.

அவளது விவரங்கள் ஒவ்வொன்றும் அவனது இதயத்தை பல கோடி மடங்காய் துடிக்க வைத்தன. தனது நண்பனிடம் ஆங்கிலத்தில் பேசியவன், காற்று அழுத்தம் நிலையாய் இல்லாததினால் அவனும் அவளுடன் சேர்ந்து குதிக்க வேண்டுமேன ஆதர்ஷினியிடம் கூறச் சொன்னான். தன்னுடன் குதிப்பவன் யாரென அவள் ஆர்வமாய் பார்க்க, சரித்திரனோ அவளிடம் தனது வதனத்தை காட்டாமல் போக்கு காட்டினான். குதிக்க போகும் ஆர்வத்தில் இருந்தவளும், அவன் யாராக இருந்தால் என்ன? என்ற அலட்சியத்தில் தான் குதிக்க போகும் இடத்தை பார்க்கத்தொடங்கினாள். அவள் அருகில் நின்றிருந்தான் சரித்திரன். அவளோ அவனைப் பார்க்காமல் கண்களை மூடி “ரிது” என்று கூறினாள். அவள் உதட்டசைவைப் பார்த்தவனுக்கு சர்வமும் அடங்கி போனது!

அவன் நகராமல் இருப்பதை உணர்ந்தவள், “ஜம்ப் மேன்” என்றபடி அவன் முகத்தை பார்க்க, இருவருமே அந்தரத்தில் தலைக்கீழாய் தொங்கி கொண்டிருந்தனர். அதிர்ச்சியில் உறைந்த ஆதர்ஷினி தனது கையில் இருந்திருந்த செல்ஃபி ஸ்டிக்கை கீழே போடப்போக அதை நிறுத்தி பிடித்து அவளையும் நெருங்கி பிடித்துக் கொண்டான் சரித்திரன்.

பலமுறை குதித்தவன் அல்லவா? அதனால் அவனுக்கு அவளது அதிர்ச்சியை சமாளிக்க எளிதாகத்தான் இருந்தது. அவளது செல்ஃபோனில் சில படங்களை டக்கென க்ளிக் செய்தவன்,

“மூச்சு விடு ரிஷி.. பைத்தியமாடீ உனக்கு?” என்று அதட்டவும், அப்போதுதான் தான் மூச்சே விடவில்லை என்பதை உணர்ந்தாள் அவள். தலைக்கீழாய் தொங்கி கொண்டிருந்தவள் மூச்சு விடாமல் இருப்பதை உணர்ந்து சீராவதற்குள் மயக்கம் போட்டிருந்தாள்.

“ஷிட்” என்றவன் உடனே தங்கள் இருவரையும் மேலே இழுக்குமாறு கட்டளையிட்டான்.

டுத்த பத்தாவது நிமிடத்தில், சரித்திரனின் மார்பில் சிறுபிள்ளைபோல மயங்கி சாய்ந்திருந்தாள் ஆதர்ஷினி. அவளையும் ஆகாஷையும் பார்த்த அதிர்ச்சியிலும் சந்தோஷத்திலும் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்தான் சரித்திரன். ஒரு மரபெஞ்சில் அவன் அமர்ந்திருக்க, அவன் மார்பில் ஆதர்ஷினி சாய்ந்திருக்க, ஏதோ சினிமா படம் பார்ப்பதைப் போல கன்னத்தில் கைவைத்துக் கொண்டு இருவரையும் பார்த்தான் ஆகாஷ். சட்டென சிரித்திருந்தான் சரித்திரன். சந்தோஷமா, அதிர்ச்சியா? அல்லது தனது ஆருயிரானவள், தன் கைவளைவில் இருப்பதை எண்ணி வந்த களிப்பா? அல்லது அவளுக்கு இன்னும் மணமாகவில்லை என்று தெரிந்த செய்தியா? ஏதோ ஒன்று அவனை மனமார சிரிக்க வைத்தது. ஆகாஷ் அவனைப் பார்த்து முறைக்கவும்,

“ ஹீ ஹீ.. டேய் இவளுக்கும் பங்கீ ஜம்பிங்க்கும் என்னடா சம்பந்தம்? சின்ன கால்வாயை தாண்ட சொன்னா கூட என் கையை இறுக்கமா பிடிச்சுப்பா! அப்படி இருந்தவ, இப்போ இவ்வளவு உயரத்துல இருந்து குதிக்கிறா? அதுவும் கத்தவே இல்லை தெரியுமா?” என்று அவன் ஆச்சர்யப்படவும்,

“ ஏன்டா சொல்ல மாட்ட ?  அவ உன்னை விட்டு ஒரு நாள் காணாம போனதும் பெரிய ரிஷி மாதிரி நீயும் காணாமல் போயிட்ட ! அவ பண்ணின அழிச்சாட்டியத்தை சமாளிக்கிறது எவ்வளவு கஷ்டமாக இருந்துச்சு தெரியுமா? முட்டாளாடா நீங்க ரெண்டு பேரும்? ப்ரண்ட்ஸ் லவ் பண்ண கூடாதுன்னு சட்டமா இருக்கு? லவ் பண்ணா சொல்லித் தொலைய வேண்டியது தானே?  லைஃப்ல அஞ்சு வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டீங்களேடா!” என்று ஆகாஷ் கூறவும்,

“ ஒரு நாளா? டேய் இவளை எத்தனை நாளாக நான் தேடினேன் தெரியுமா? என்னோட கெட்ட நேரம் நீயும் உன் தம்பிக்கு உடம்புசரி இல்லன்னு ஊருக்கு போயிட்ட.. இவளை தேடி தேடி, கடைசில இவளுக்கு என்னை பிடிக்கலன்னு புரிஞ்சுக்கிட்டுத்தான் நான் இங்க வந்தேன்” என்று சரித்திரன் கூறவும், அவன் வேதனையை உணர்ந்த ஆகாஷ் கோபம் தணிந்து பேசினான்.

“ இப்படியே இவளை கையில தூக்கி வெச்சுருக்க போறியா? பக்கத்துல இருக்குற ஹோட்டல்ல தான் ரூம் போட்டுருக்கோம். அவ அங்கயே ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றான் ஆகாஷ்.

ஹோட்டலில் தனது அறையில் ஆதர்ஷினியை படுக்க வைத்தான் சரித்திரன். “டேய் அவ என் ஆளு..என் ரூமில் தான் தங்குவா” என்று டைலாக் பேசியவனை சிரிப்புடன் முறைத்தான் ஆகாஷ். கொஞ்ச நேரத்தில் அவளே விழித்துக் கொள்வாள் என்று அறிந்திருந்த சரித்திரன், அவள் நிம்மதியாய் உறங்கட்டும் என்றெண்ணி ஆகாஷுடன் அறையிலிருந்து வெளியேறினான். நடந்ததை பற்றி பேசி பகிர இருவருக்குமே நிறைய விஷயங்கள் இருந்தன. முக்கியமாக நேற்று பதிவு செய்த ஆடியோவை சரித்திரனுக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தான் ஆகாஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.