(Reading time: 26 - 51 minutes)

ட்பெனும் நம் பாதை காதலெனும் வாசலை

அடைந்திட வேண்டுமென ஆசைக் கொண்டேன்!

என் முதல் காதல் நீயானாய்!

உன் இதழ்களில் இதழ் சேர்க்கும் மோகம் எழவில்லைத்தான்,

எனினும் நீ பூக்களை முத்தமிட்டாலும் கோபம் கொண்டேன்!

நீ மற்ற பெண்களிடம் பேசும்போது உன்னை தடுக்கவில்லைத்தான்,

எனினும் நீ அவர்களிடம் அதிகம் பேசாதபடி உனது நேரங்களை திருடிக்கொண்டேன்!

உறவோ பகையோ, நமக்குள் தொடங்கும் அனைத்துமே

நமக்குள்தான் முடிய வேண்டும் என்று மனதினுள் முடிச்சிட்டேன்!

ஏன் என் காதல் உனக்கு புரியவில்லை உனக்கு?

இன்றுவரை அது புரியாதபுதிர்தான் எனக்கு!

உன்னை காணும்போதெல்லாம் விழிகளால் சிரிக்கிறேன்,

வார்த்தைகளால் உன்னை சிலிர்க்க வைக்கிறேன்,

என்னை இதயத்தின் கடவுச்சொல்லை உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன்!

மூன்று வார்த்தைகள் சொல்லிட துணிவு வராமல்

முன்னூறு வார்த்தைகளால் சுற்றி வளைக்கிறேன்!

என் மௌனத்தை வைத்தே,

கோபமா துன்பமா என்று அறிந்து கொள்பவனுக்கு,

காதல் மட்டும் எப்படி புரியாமல் போனது?

ஒருவேளை,

என் காதல் உனக்கு சுமையானதா?

நோ என்று நோகடிக்க விரும்பாமல்

விலகி நிற்கின்றாயா?

உனக்கு தோழியாகும் வரம் கிடைத்த எனக்கு

காதலியாகும் சாபம் கிடைக்காதா ?

(முறைக்காதே ..இந்த மக்கு பையனை சமாளிக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்குத்தான் தெரியும்!)

கல்லூரியின் இறுதி நாள்!

கண்ணீருடன் காதலை சொல்லி

உன் மார்பில் சாய்ந்திட எண்ணினேன்!

நீயோ இன்னொருத்தியை நேசிப்பதாய் கூறினாய்!

மரணம் என்பதின் பொருள்

மனதில் தோன்றிடும் ரணம் என்று அன்றுத்தான் புரிந்து கொண்டேன்!

காதலை சொல்லாமலேயே தோல்வியைத் தழுவினேன்,

தோழியாக உனக்கு துணையிருக்க சொன்னாய்!

எப்படி முடியுமடா?

உன்னையே என்னவனாய் மனதினுள்

பூட்டி வைத்துக் கொண்டேன்!

இனி நீயே கெஞ்சினாலும் உனக்கு விடுதலையில்லை!

காதலை மறைத்து தோழியாய் உனக்கு

துணை நிற்கும் அளவிற்கு தைரியசாலி இல்லையடா நான்!

பிரிந்தேன் உன்னை! மறந்தேன் என்னை!

மகிழ்ச்சி என்பதின் பொருள் எல்லாம் இயந்திரத்தன்மையானது!

கனவோ நனவோ எனக்குள் ஒலிப்பதெல்லாம் ஒரே பெயர் தான்..

ரிது..ரிது..ரிது..!

போதும்டா..கை வலிக்கிது.. இது வரைக்கும் போட்ட ட்ராமா எல்லாமே போதும். உடனே கீழே இருக்கும் பார்க்குக்கு வா.. வித் கொலைவெறி, ரிஷி!

அன்னை எழுதிய கடிதம் போல ஆயிரம் முறை படித்து பார்க்கவில்லை சரித்திரன்! எனினும் ஆதர்ஷினி எழுதிய ஒவ்வொரு வரிகளும் அவன் இதயத்தில் அழியாமல் வீற்றிருந்தன! அவளது கடிதத்தை மடித்து சட்டைப்பையில் வைத்துக் கொண்டு அவள் கூறிய இடத்திற்கு ஓடி வந்தான் சரித்திரன். வண்ண வண்ண பூக்களுக்கு நடுவில் அவன் நின்ற நேரம் வான்மகள் மழையாய் பொழிந்து தனது வாழ்த்தினை தெரிவிக்க தொடங்கினாள். முகத்தில் தெறித்த மழைத்துளிகளை அவன் துடைக்க இரு கரங்கள் அவனது விழிகளை பின்னாலிருந்து மூடின. ஆதர்ஷினி தான். அவள் கையைப் பிடித்து தன்முன் நிறுத்தியவன் அவளின் அழகில் சொக்கி போய் நின்றான். அவனுக்கு பிடித்ததுபோல சேலைக் கட்டி கண்களில் காதல் தேங்கிட நின்றாள் அவள்.

ஐந்து வருடங்களின் பிரிவு இருவரின் கண்களிலும் கண்ணீராய் பிரதிபலித்தது. மழைத்துளிகளின் ஆட்டம் அதிகமாகிட, அவன் பேசிடும் வார்த்தை அவள் காதில் விழவில்லை!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.