அவன் வெளியேறிய சில நிமிடங்களில் ஆதர்ஷினியை சரித்திரனின் கைப்பேசி எழுப்பியிருந்தது. “ நான் எங்கே இருக்கிறேன்?” என்று குழம்பியவள், நடந்ததை நினைத்துப் பார்க்க, சரித்திரன் விட்டுச் சென்றிருந்த அவனது கைப்பேசி ஓயாமல் ஒலித்தது. ஜானவி தான் அழைத்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவரிடம் பேசப்போகும் ஆவலில் ஃபோனை எடுத்தாள் அவள்.
“ ஹலொ அம்மா”
“ யாரு லைன்ல?”
“ அம்மா நான் தர்ஷினி பேசுறேன்” என்று அவள் கூறவும், குளிர்ந்து போனது அந்த தாயுள்ளம். “ விநாயகா, என் வேண்டுதலை நிறைவேத்திட்டப்பா. என் மருமகளை என்னிடம் கொடுத்துட்ட!” என்று வாய்விட்டே கூறியவர், ஆனந்த கண்ணீருடன் அவளிடம் பேசத் தொடங்கினார். ஆகாஷ், சரித்திரனிடம் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில், ஜானவியும் ஆதர்ஷினியிடம் உண்மையை சொல்லிக் கொண்டிருந்தார். (யெஸ்..இப்போ ஃப்லேஸ்பேக் நேரம்!)
ஆகாஷ், சரித்திரன், ஆதர்ஷினி மூவரும் கல்லூரியில் இணைந்த நெருங்கிய நண்பர்கள். என்னத்தான் ஆதர்ஷினி இருவரிடமும் நட்புடன் பழகினாலும், அவளுக்கு எப்போதுமே சரித்திரன் ஒருபடி மேல் தான். அவன் மீது அளவுகடந்த நேசத்தைக் கொட்டினாள் அவள்.
அடிப்படை நட்பையும் மீறி அவர்களுக்குள் நல்ல பிணைப்பு இருந்தது. ஒருநாள் அவளைக் காணவில்லை என்றாலும் தவித்து விடுவான் சரித்திரன். ஒருநாள் அவன் சரியாக பேசாவிடினும் வாடிவிடுவாள் ஆதர்ஷினி. இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் வந்தாலும், தங்களுக்கு நடுவில் மூன்றாம் மனிதரை வர விட்டதே இல்லை! “ ரெண்டு பேரும் ஜாக்கு ஏத்த மூடி”என ஆகாஷே இருவரின் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்கித்தான் நிற்பான்.
அவன் அருகில் அவளும், அவள் அருகில் அவனும் செலவழித்த ஒவ்வொரு நாளுமே அழியா கவிதையாய் இருந்தது. “இந்த நொடியில் தான் உன் மீது காதல் வந்தது!” என்று சுட்டிக் காட்டிட முடியாத இனிய நாட்கள் அவை. எனினும், ஒருவர் மீது மற்றொருவர் வளர்த்து வந்த காதலை மறைத்தே வைத்தனர்!
அதற்கு காரணம், சரித்திரன்-ஆதர்ஷினியின் நட்பின் மீது அவர்களும் மற்றவர்களும் வைத்திருந்த நம்பிக்கைத்தான். இதுவரை “ என் தோழி, என் தோழன்” என்று மார்த்தட்டிக் கொண்ட உறவை காதல் என்று கூறுவது தவறோ என்ற எண்ணம் இருவருக்கும் இருந்தது. காதலைச் சொல்லி நல்ல நட்பை இழந்திட கூடாதே என்ற தீவிரத்தில் தங்களது காதலை போட்டி போட்டுக் கொண்டு மறைத்தனர் இருவரும்.
ஆனால், காலமும் காதலும் இணைந்து நடத்திய போராட்டத்தில் முதலில் தோல்வியைத் தழுவினான் சரித்திரன். கல்லூரி வாழ்க்கை முடிந்த கடைசி நாள், அவனால் மறக்க முடியாத நாள்!
நாளை முதல் அவளை எந்த உரிமையில் சந்திப்பான்? நாள் முழுக்க எப்படி அவளோடு இருக்க முடியும்? இருவரும் வேலை, குறிக்கோளென அவரவர் வாழ்க்கையை நோக்கி பயணிக்கத் தொடங்கினால், பிரிவு ஏற்படுமோ? இது அனைத்தையும் விட, ஆதர்ஷினி இன்னொருவனின் மனைவியாய் மாறிவிடுவாளா? என்ற கேள்வித்தான் அவனை குடைந்து எடுத்தது. தனது ஐயத்தை வழக்கம்போலவே தன் அன்னையிடம் கூறினான் சரித்திரன்.
“ அவளைத்தான் நான் லவ் பண்ணுறேன்மா.. நான் அவ கிட்ட சொல்லிடவாம்மா? நானும் அவளும் வேலைக்கு போயி, அவ வீட்டுல கல்யாண பேச்சை எடுக்கும்போது, நாம அவ வீட்டுக்கே போயி பொண்ணு கேட்கலாம்மா.” என்று மண்டியிட்டு கூறிய மகனுக்கு நெற்றியில் முத்தமிட்டு பச்சைக் கொடி காட்டினார் ஜானவி.
கல்லூரியில் கடைசி நாளென அனைவரின் முகத்திலும் சோகம் அப்பிக் கொள்ள, சரித்திரன் மட்டும் புன்னகையுடன் வளம் வந்தான். “ நான் காதலை சொன்னதும் என்ன செய்வா? அடிப்பாளா? சந்தோஷத்துல அழுவாளா? ஹக் பண்ணிப்பாளா?” என்று அவனது கற்பனை குதிரைகள் வேகமாய் ஓட, அவனது விதியோ சிரித்தது.
காதலுடன் ஆதர்ஷினியை நோக்கி ஓடி வந்தவன் ஒரு நொடி அப்படியே நின்றான். “ச்ச என்னடா சரித்திரா… உன் சரித்திரத்தில் இது எவ்வளவு முக்கியமான நாள்? இதை இப்படி மொக்கையாகவா சொல்லுவ? உன் செல்லத்தை அசத்த வேணாமா?” என்று அவனது உள்மனம் நம்பியார் வேலை பார்க்க, நடக்கப்போவது அறியாமல் ஆதர்ஷினியின் முன் நின்றான் அவன்.
“ரிது..” என்று அவனை அழைத்த ஆதர்ஷினி விட்டால் அழுதுவிடும் நிலையில் இருந்தாள். நாளையிலிருந்து அவனைப் பார்க்க முடியாதே என்ற சோகத்தில் இருந்தாள் அவள். இவனை நம்பினால் இன்னும் அறுபது ஆண்டுகள் கடந்தாலும் காதலை சொல்ல மாட்டான் என்று உணர்ந்தவள், தானே காதலை சொல்லி விடலாம் என்று நினைத்தாள். “