எமனோடு இன்னமும் போராடிக்கொண்டிருந்தான் பிரதீப்.
“அப்பப்போ நினைவு வருது. கொஞ்ச நிமிஷத்துல மறுபடியும் போயிடுது. மூச்சுத்திணறல் இருக்கறதால இரத்தம் மட்டுமில்லாம ஆக்சிஜனும் கொடுக்க வேண்டி இருக்கு. நீங்க அவர் நண்பரா? பேர் என்ன?”
“தமிழ்நாடுங்கிற அறிமுகத்திலே இப்ப ஒருவாரமாத்தான் பழக்கம். என் பேர் அஸ்வின்”
”அது நீங்கதானா? நினைவு திரும்பறப்போல்லாம் உங்களைப் பார்க்கணும்னு தவியா தவிச்சார்.”
’அடப்பாவி செத்தும் கொடுத்த சீதக்காதி போல செத்தும் கெடுக்கிற படுபாவியா? கூடாது.. பிரதீப் இனி வாய் திறக்கவே கூடாது’ – மிதுனா கறுவினாள்.
“ஏதோ எழுதி உங்ககிட்டே குடுக்கச் சொல்லி நர்ஸ் ரோஸ்கிட்டே கொடுக்கவும் செய்தார்..”
‘சந்தேகமே இல்லை. என்னை பழிவாங்கத்தான் வந்திருக்கிறான். இத்தனை வன்மம் உள்ள இவனது காதலை மட்டுமல்ல இந்த காதலனையே நான் கொல்ல நினைத்தது.. முயற்சித்தது.. இனி முயற்சிக்கப்போவது எதுவுமே தப்பில்லை...தப்பில்லை தப்பே இல்லை’ – மிதுனாவுக்குள் உறுதி ஊறியது.
“ரோஸ் டூட்டி முடிஞ்சு கிளம்பிட்டிருப்பாங்க.. ஒரு நிமிஷம் என் கூட வாங்க” - நர்ஸுடன் அஸ்வின் ஓடிய அந்த சிறு அவகாசத்தை இழக்க விரும்பாத மிதுனா... மெல்ல கைப்பையைத் திறந்தாள்.
ஏமாற்றமில்லை இம்முறை! கச்சிதமாக காரியம் முடித்துவிட்டு பரபரப்பாய் ஐ சி யூ விட்டு வெளியே வந்தவள் அஸ்வினைத் தேடினாள். ’இனி அந்த கடிதம் அஸ்வினுக்கு கிடைக்காமல் செய்ய வேண்டும்’ என காரிடரில் ஓட்டமும் நடையுமாக விரைந்தவள் தூரத்தில் காரிடரின் மறுமுனையிலிருந்து பரபரப்பாய் ஓடிவரும் அஸ்வினின் ஆவேசம் கண்டு மரண அதிர்ச்சியில் திகைத்துப்போனாள்! அவன் கையில் கடிதம்!
ஐயத்திற்கு இடமே இல்லை. ஆக்சிஜன் குழாயையும் இரத்தக் குழாயையும் மிதுனா துண்டிப்பதற்கு முன்னமேயே பிரதீப் அவள் கழுத்தை அறுத்துவிட்டிருக்கிறான்.. ஒரு துண்டு கடிதம் மூலம்! ’இல்லாவிட்டால் இத்தனை ஆக்ரோஷத்தோடு கடிதமும் கையுமாக அஸ்வின் ஓடி வருவானா?’.
”மிதுனா இங்கே பாரு.. பிரதீப் என் கிட்டே என்னவோ சொல்ல நினைச்சு இதை எழுதியிருக்கிறான். பேசத்தெரிஞ்ச எனக்குத்தான் தமிழ் வாசிக்க தெரியாதே. ப்ளீஸ் படிச்சுச் சொல்லேன்”
ஒளிவதற்கு வழியில்லை என தவித்திருந்த மிதுனா சந்தோஷத்தில் சிலிர்த்துப்போனாள். கடவுள் இன்னமும் அவள் பக்கம்தானா? . பிரதீப் என்ன எழுதியிருந்தாலும் அதை மாற்றிச் சொல்வதா சிரமம்? எவ்வளவோ செய்துவிட்டாள்.. இதைச் செய்ய மாட்டாளா? ஆர்வத்தையும் பதட்டத்தையும் வெளிக்காட்டாமல் வாங்கிப் பார்த்தாள். மறுகணம்...
‘ஓ’ வென அலறிச் சரிந்தாள் மிதுனா! கூடவே கடிதம் !மட்டுமல்ல அவள் கைப்பையும் சரிந்து விழுந்து வாய் பிளந்தது. தரையில் முட்டிமுட்டி அழும் மனைவியையே குழப்பமாக பார்த்து நின்றான் அஸ்வின்.
மிதுனாவின் ஓலத்திற்கும் அஸ்வினின் குழப்பத்திற்கும் மட்டுமின்றி பிரதீப்பின் மரணத்திற்குமான மவுனசாட்சியாக காரிடர் ஓரத்தில் கிடந்தது கத்தி! அருகிலேயே அந்த துண்டுகடிதம் –
‘.........அஸ்வின் சார், காலையிலே பைக் எடுக்கிறப்போ பேஸ்மெண்ட் பார்க்கிங்க்ல உங்களுக்கு டாட்டா காட்டுறப்போதான் உங்க மனைவியைப் பார்த்தேன். அவங்க எங்க பக்கத்து ஊர் பொண்ணு மட்டுமில்லே என் கூட காலேஜ்ல படிச்சவங்க. நாங்கள்லாம் தேவதையா நினைச்சு பார்த்தாலும் அவங்க யாரையுமே தலைநிமிர்ந்து பார்க்காத தங்கமான பொண்ணு. பெத்தவங்களையும் பிறந்த ஊரையும் பிரிஞ்சு ரொம்ப தூரம் வந்திருக்கிற அந்த தேவதையை காலமெல்லாம் கண் கலங்காம வச்சு காப்பாத்துங்க சார் ப்ளீஸ்.’!
This is entry #124 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க.
எழுத்தாளர் - ஐஷ்வா
{kunena_discuss:1083}