“அதுவந்து... ஒருவேளை முன்னாடியே பார்த்திருந்தால் என் பின்னாடியே சுத்திருப்பன்னு சொன்னேங்க மேடம்...” என்று பேச்சை பவ்வியமாக முடிப்பான்.
கதிரவன் மறைந்து இந்திரன் வந்து வெகு நேரம் ஆகிவிட்டது இருப்பினும் ரோஹிணி இன்னமும் வந்தபாடில்லை, அந்த நேரம் என்று வீட்டிற்கு ராஜேஷின் சொந்தங்கள் சிலர் வந்திருந்தனர். சிறிது நேரம் பேசியவாறே அவளை விசாரிக்க துவங்கவும் அவள் வெளியே சென்றிருப்பது தெரிந்த பின்பு ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்துக்கொண்டனர்.
அவர்கள் தங்களுக்குள் பார்த்துக்கொள்வதர்க்கும் ரோஹிணி அழைப்பு மணி அழுத்தவும் சரியாக இருந்தது.
“ரோஹிணி தான் வந்துட்டா இருங்க வரேன்” என்று கதவை திறக்க சென்றான். வெளியே காலணிகளை பார்த்தவள், அவன் கதவை திறந்ததும் “ஹே என்னப்பா நம்ம ரேடியோ மிர்ச்சி ஹாட் ஆன்டி வந்திருக்காங்க போல” என்று ரகசிய குரலில் கேட்டாள். அவள் கூறியதில் வந்த சிரிப்பினை கட்டுபடுத்திக்கொண்டு “உதை வாங்குவ.. ரவுடி...” என்று சிரித்தவண்ணம் அவளை உள்ளே அழைத்து வந்தான்.
அவளை மேலும் கீழுமாக பார்த்தவர்கள், மெல்லிய முறுவலோடு மரியாதை பேச்சுக்கள் முடித்தனர். பின்பு தான் துவங்கியது படம்... “ஹ்ம்ம்... என் அக்கா மகன் போல ஒரு புருஷன் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும் ரோஹிணி.. இப்போ பாரு நீ எப்போ வேணா வரலாம் எப்போ வேணாலும் போகலாம் இவன் உனக்காக வீட்டில காத்துக்கிட்டு இருக்கான்”.
அவர் எதிர்பார்த்தது என்னவோ ரோஹிணியின் கோவத்தையும் அவளின் எதிர் பேச்சினையும் ஆனால் அவளோ முறுவலோடே “பின்ன இல்லையா அத்தை அவர் கிடைக்க நிஜமாவே நான் குடுத்துதான் வச்சிருக்கணும்” என்று ஒத்து ஊதினாள். என்னடா இவள் எதிர் பேச்சு பேச மாட்டிங்குராளே என்று இருந்தது அவருக்கு.
“அது தெரிந்தால் மட்டும் போதுமா ரோஹிணி... கொஞ்சம் அவனையும் கவனி... ருசியா சமைச்சு போடு கல்யாணத்துக்கு அப்பறம் அவன் உடம்பு போட்ட மாதிரியே தெரியலை... இப்படியே நீ வெளிய சுத்திட்டு இருந்தன்னா அப்பறம் எப்போ குழந்தை பெத்துக்குறது” என்று நேரடியாகவே கேட்டுவிட்டார். என்னதான் அவளுக்கு கோவம் வரவில்லை என்றாலும் இதற்கு எப்படி பதில் தருவது என்று கொஞ்சம் கூச்சமாக கூட இருந்தது. அவள் எதுவும் பேசும் முன்பே.. “அட நீங்க வேற அத்தை அவள் சமைக்குற சாப்பாடு செரிக்குறதுக்காக நான் முன்ன விட இரண்டு மடங்கு உடற்பயிற்சி செய்றேன் அவ்வளவு சுவையா இருக்கு.. அதோட குழந்தை எல்லாம் இப்போதைக்கு வேண்டாம் ஒரு வர்ஷம் போகட்டும்னு நான் தான் சொல்லிருந்தேன்” என்று அவளுக்கு பதிலாக இவனே அனைத்தும் கூறிவிட்டான்.
அவன் பேசியதற்கு இப்போது என்ன பதில் சொல்வது என்று புரியாத அவனது பெரியம்மா... “ம்ம்ம் ம்ம்ம் கல்யாணத்துக்கு அப்பறம் நல்ல பெண்டாட்டி தாசன் ஆகிட்டடா” என்று கிண்டல் செய்வது போல சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு கிளம்பினார். இவரது பேச்சையே பின்பற்றும் கணவரும் வெளியே செல்லும் நேரத்தில் “மனைவி சொல்லே மந்திரம்ன்னு இருக்காதப்பா அப்பறம் இப்படி தான் என்னை மாதிரி இருக்கனும்” என்று ரகசியமாக சொல்லிவிட்டு சென்றார்.
அவர் கூறிய விதத்தில் சிரிப்பு வந்துவிட, அவர் சென்றதும் அவர் கூறியதை நினைத்து சிரித்துக்கொண்டே மனைவியிடம் வந்தான். அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக வேலை செய்துக்கொண்டிருந்தாள் ஏனென்றால் குழந்தை பேரை ஒரு வருடத்திற்கு தள்ளிப் போட்டது அவளாயிற்றே அந்த யோசனையில் மனம் சென்றது. அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன் சட்டென நிலையை மாற்றிக்கொண்டு “சேச்சே இந்த ரூம் லைட் மாத்தனும் ரோஹிணி...”
ஏன் திடிரென்று இப்படி கூறுகிறான் என்று புரியாமல் முழித்தாள்
“பின்ன என்னமா இந்நேரம் என் ரௌடியோட முகம் எவ்வளவு brighta இருக்கும். இப்போ பாரு இந்த லைட்டால ரொம்ப டல்லா தெரியுது” என்று அவள் கன்னத்தை கிள்ளி கொஞ்சினான். அவனது பேச்சில் மெல்ல நகைத்தவள் தொடர்ந்து வேலை செய்துக்கொண்டிருந்தாள் இன்னமும் சீண்டுவதற்காக. அவனோ “ஹே இதோ இதோ இப்போ லைட்டா பிரஹாசமா வர மாதிரி இருந்துதே... ச்சே அதுக்குள்ள போயிருச்சு” என்று கிண்டல் செய்தான். அவன் பேச பேச மனம் இளகிவிட்டது எப்படி இவனால் மட்டும் எதுவும் நடவாதது போலவே இயழ்பாகவே இருக்க முடிகிறது ஒருவேளை அவர்கள் கூறுவதுப் போல நான் தான் இவனை ஒழுங்காக பார்த்துக்கொள்ளவில்லையோ என்று அவனை பார்த்தவண்ணமே யோசித்துக்கொண்டிருந்தாள்.
“ஒய்.. என்ன யோசனை.. மாமனோட அழகுல மயங்கிட்டியா??” என்று சொடுக்கு போட்டு அழைத்தான்.
“ம்ம்ம்ம்.. ரொம்ப ஆசை தான்..” என்று கிண்டலுக்காக பேசிவிட்டு அவனருகில் எதிரில் நின்றவள் “ஏன் ராஜு ஒருவேளை நான் தான் உன்னை ஒழுங்கா பார்த்துக்களையோ...” என்று கேட்டாள்.
“ஆரம்பிச்சுட்டாள்டா.. ஒவ்வரு தடவையும் சொல்லனுமாடி... என் அம்மா கூட இருந்ததை விட என் அப்பாகூட இருந்ததை விட உன் கூட இருக்கும் போது தான் நிம்மதியா இருக்கேன், சந்தோஷமா இருக்கேன் போதுமா!!!” என்று அவள் பேசுவதை போலவே தலையை ஆட்டி ஆட்டி படத்தின் வசனத்தை கூறினான்.