அவள் பேசுவதை கேட்டு பதில் எதுவும் சொல்லாமல் கண்களையே பார்த்துக்கொண்டு இருந்தவன் ஒரு சிறிய முறுவலோடு இடத்தை விட்டு எழுந்து சென்றுவிட்டான். அவன் அப்படி சென்றது ஏனோ நெருடலாக இருந்தது அவளுக்கு. அவன் எப்போதும் இப்படி பேசாமல் செல்பவன் இல்லையே எதுவாக இருந்தாலும் எளிதாக பேச்சை மாற்றி சிரிக்கவைத்துவிட்டு தான் செல்வான். ஒருவேளை எதார்த்தமாக அவன் கேட்டதை நாம் தான் கெடுத்துவிட்டோமா என்று எண்ணி வருந்தினாள். மெதுவாக அவனது அருகில் சென்றவள் அவனது கை விரல்களோடு தனது கையை கோர்த்துக்கொண்டு “சாரிப்பா... தெரியாம அப்படி பேசிட்டேன்” என்று அவன் மீது சாய்ந்துக்கொண்டு மன்னிப்பு கூறினாள் அவனும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவளது தலையை கோதிவிட்டான்.
ஏனோ சில நேரங்களில் ராஜேஷின் மனதினை ரோஹிணியினால் அறியமுடிவதில்லை. அந்த கண்கள் ஏதோ சொல்ல முற்படுகிறது ஆனால் ஏனோ அதை புரிந்துக்கொள்ள முடியவில்லையோ என்று அவளுக்கு பெரும்பாலும் தோன்றும். அதை அவள் அவனிடமே ஒருமுறை சொல்லியும் இருக்கிறாள் அதற்கும் அந்த கண்கள் அந்த பதிலையே தரும்.
இதை அடுத்து நாட்கள் கொஞ்சம் வேகமாக செல்ல துவங்கியது. விழாவில் விருது பெற்றது, புது தோழியிடம் அடிகடி தொடர்பில் இருப்பது என்று நாட்கள் பறந்தது. ஆனால் செல்ல செல்ல ரோஹிணியின் மனதில் குழப்பங்கள் அதிகமாக துவங்கி இருந்தது. அதற்கு பெரும் காரணம் ராஜேஷின் இரவு நேர தனிமை, எதற்காக தனியாக செல்கிறான் யாரோடு பேசுகிறான் எதை தன்னிடம் இருந்து மறைக்கிறான் என்று புரியவே இல்லை அவளுக்கு. வெளிப்படையாக கேட்டு அது தவறான யூகம் என்று ஆகிவிட்டால் பின்பு அவனை எப்படி மீண்டும் எதிர்கொள்வது என்று பயத்திலேயே தயங்கி தயங்கி இருந்தாள். இதை காட்டிலும் அவளின் புது தோழி கூறிய கதைகள் ஆச்சர்யமாக இருந்தது ஏனென்றால் அவள் கூறியது அவளையும் ஒரு ஆண்மகனையும் பற்றி. பின்பு வந்த நாட்களில் அந்த செய்தியை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமாக ரோஹிணி விடாபிடியாக தெரிந்துக்கொண்டாள். முதல் நாள் விளையாட்டாய் துவங்கிய பேச்சு, முழுமையாக கேட்கும் போது குற்ற உணர்வாக இருந்தது.
அந்த முகம் யார் என்றே அவர்களின் தோழிகளுக்கு தெரியாதாம் ஆனால் இவளும் ஒருவனை காதலித்தாளாம். இந்த செய்தியை அறிந்ததில் இருந்து தன் மீதே குறைவான எண்ணம் தோன்ற துவங்கிவிட்டது அவளுக்கு. முன்பே தன்னிடம் இருக்கும் குறை தெரிந்து திருமணம் செய்திருக்கிறான் ராஜேஷ் என்ற எண்ணத்தில் சில சமயங்களில் தன்னை தாழ்த்திக்கொள்பவள் இப்போது இந்த காரணத்தினால் மேலும் ஒதுங்க துவங்கிவிட்டாள்.
சில நேரங்களில் அவளில் ஒதுங்குதலை கவனித்தவனுக்கு ஏனோ சரிசெய்யும் அளவிற்கு நேரம் அதிகம் கிடைக்காமல் போனது சில நாட்களாக. இரவெல்லாம் முழித்து ஏதோ மடிக்கணியில் வேலை செய்வதும் அதை பார்த்து பார்த்து ரசிப்பதும் என்று பெரும் காரியமாக சுற்றி கொண்டிருந்தான். சில நாட்கள் அதை பார்த்தவள் பின்பு ஊர்ஜிதமே செய்துவிட்டாள் யாரோ ஒருவரோடு நெருங்கி பழக ஆரம்பித்துவிட்டான் என்று. அவனது நடவடிக்கையும் மாறித்தான் போயிருந்தது. நாட்களை கொஞ்சம் கொஞ்சமாக எண்ண துவங்கி இருந்தான். மனதில் இருந்த களிப்பு முகத்தில் தெரிந்தது ஆனால் காரணம் தான் புரியவில்லை ரோஹிணிக்கு. முன்பே அவன் மனம் புரியாத போது இப்போது புரிந்துகொள்ள தனக்கு தகுதியும் இல்லை என்றெல்லாம் எண்ண துவங்கிவிட்டாள். அவள் பயப்படுவதற்கு ஏற்ப அவனும் ஒரு நாள் வாய்திறந்து கூறிவிட்டான்.
“ரோஹிணி...”
“....”
“இன்னும் இரண்டு நாளைல நம்ப 1st அன்னிவெர்சரி...”
“ம்ம்ம்ம்...”
“அன்னைக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும், எதுவா இருந்தாலும் பொறுமையா கேட்பள்ள.. ஒரு முக்கியமான ஆளை உனக்கு அறிமுகம் படுத்தனும்...” இது அனைத்தும் தலையை குனிந்தவண்ணமே கூறினான்.
“முக்கியமானனா???”
அவளறியாமல் மெல்ல சிரித்தவன்... “அது அன்னைக்கு உனக்கு புரியும், என்னோட வாழ்க்கையில கிடைக்க மாட்டாளான்னு நினைச்சுட்டு இருந்தவள்... அவளை தொலைச்சுட்டேன்னே நினைச்சுட்டேன். திரும்பி என்கிட்டவே வந்துட்டாள்.”
அவன் பேச பேச தலை சுற்ற துவங்கிவிட்டது அவளுக்கு, சொல்லியேவிட்டான் அவ்வளவு தான் இந்த திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது. அன்றைக்கு அவள் இங்கே வர போகிறாள் என்னை வெளியேற்ற போகிறான் என்று மனது சொல்ல சொல்ல அதை அவளால் ஏற்றுகொள்ள முடியவில்லை. இனிமையாய் துவங்கிய திருமண வாழ்க்கைக்கு இவ்வளவு அறப்ப ஆயுசா என்று மனம் நொந்துக்கொண்டது. இதையெல்லாம் சொல்லி முடித்தவன் எழுந்து சென்றுவிட்டான். இதுவரை அவள் தான் ஒதுங்கி போகிறாள் என்று நினைத்துக்கொண்டிருந்தாள், இந்த உரையாடலுக்கு பின்பு தான் உணர்ந்தாள் அவனும் தன்னிடம் இருந்து ஒதுங்கி இருப்பதை.
ஆகஸ்ட் 3... முதலாம் ஆண்டு திருமண நாள்... எப்படி எப்படியெல்லாமோ கனவுகளோடு இருவரும் முன்பெல்லாம் இந்த நாளுக்காக காத்திருக்க, அந்த நாளும் வந்துவிட்டது. ஏன் தான் அந்த நாள் வந்ததோ என்றிருந்தது அவளுக்கு. இன்று அவள் வந்துவிடுவாள் இனி இது என் வீடு நீ போகலாம் என்று கூற போகிறாள் என்று எண்ணி இரவெல்லாம் தூக்கம் மறந்து போனது. மெத்தையில் படுத்திருந்தாலும் இருவருமே தூங்கவில்லை. அவனும் கண்களை மூடி இருந்தானே தவிர உறங்கியது போல தெரியவில்லை... ஒரு கை தலைக்கு அடியிலும் ஒரு கை நெஞ்சிலும் வைத்தவண்ணம் படுத்திருக்க, கைவிரல்கள் தாளம் போட்டுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு தாளத்துக்கும் நொடிகள் விரைந்தது. அவளின் கண்கள் அதையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது.