“மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்.
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்.”
“நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்
சிரித்த ஓலியினிலுன் கைவி லக்கியே
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.”
என்ற பாரதியார் பாடலுக்கு இருவரும் காதல் ரசத்தினை காண்பவர்க்கு ஊட்டினர்.
“வேறு ஊருக்கு பொருள் ஈட்ட செல்கிறேன்” என்றான் சொக்கன்
“எனைவிட்டு பிரியாதேயென” துடிதுடித்தாள் அவள்
“சீக்கிரம் வருவேனடி என் ஆருயிர் சகியே . . .
என் உயிர் உன்னிடத்தில் . . .உடல் மட்டுமே செல்கிறது” என விடை பெற்றான்.
“திழுவிழாவைக்கூட காணாமல் செல்கிறானே” என வாட்டமுடன் இருந்தவளை தோழி தேற்றி அழைத்துச் சென்றாள்.
காட்சி – 4
பின் திரையில் ஊர் திருவிழா . . .
அலங்கரித்த கன்னியர் ஆடவர்களை மயக்க . . . குழந்தைகளின் குதூகலமும் . . . கரகாட்டமும் மயிலாட்டமும் காண்பவரை மயக்கச் செய்தது. கலையரசியின் ஆட்டமும் இடம்பெற்றது. அவள் பாதம் தரையில் உள்ளதா இல்லை காற்றில் மிதக்கிறதா என அனைவரையும் வியக்கச் செய்தது. அவள் கண் அசைவும் கொடி இடையும் காண்பவர் கண்ணை மயக்கியது.
“பூட்டைத் திறப்பது கையாலே –நல்ல
மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே – இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே”
என்ற பின்னணி பாட்டிற்கு ஏற்றாற்போல் கலையரசி ஆடினாள்.
அதன் பிறகு இளம் பெண்கள் கோலாட்டம் ஆடி அசத்தினர். பின்னணி பாட்டின்றி அந்த கோல் சத்தம் மட்டும் டக் டக்கென மதுரமாய் ஒலித்தது. சத்ததிற்கு ஏற்றாற்போல நடன அசைவுகள் இருந்தன. பொய்கால் குதிரையும் வந்து போனது. இப்படி ஊரே ஒன்று திரண்டு மகிழ்ச்சியாய் திருவிழாவை கொண்டாடியது. கலையரசிக்கு தன் காதலன் இங்கு இல்லை என்ற வருத்தம் இருந்தது.
அரங்கில் இருந்த பார்வையாளர்களுக்கு திருவிழாவை நேரில் பார்த்த உணர்வை வரவைத்தனர் மேடையில் ஆடியவர்கள்.
இனிதே திருவிழா நிறைவு பெறுகிறது.
காட்சி – 5
பின் திரை நள்ளிரவு.
கலையரசி தன் காதலனை பிரிந்த சோகத்தில் தனித்திருக்க . . . அவள் தோழி அவளை “ எத்தனை நாட்களாயினும் என்ன? வந்துவிடுவானடி பெண்ணே . . உன் காதலனை பூமி விழுங்கவிடாது . . காற்று கறைத்துவிடாது . . . தீ சுட்டெரிக்காது” என ஆறுதல் மொழியை நாட்டிய அபினயத்தோடு கூறினாள்.
“கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்.
நேர முழுவதிலுமப் பாவி தன்னையே –உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் – பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்.”
தன் காதலன் பிரிவை தாபத்தினாலும் சோகத்தினாலும் மெல்லிய நடன அசைவுகளுடன் வெளிப்படுத்தினாள் கலையரசி.
“ஆதவனும் சந்திரனும் வந்து போகின்றனர் ஆனால் என் மனத் தாமரையை மலரச் செய்ய என்னவன் திருமுகத்தினால் மட்டுமே இயலும் . . நீ தூது சென்று வருவாயாக” எனச் சொல்லிதன் தோழியை தூது அனுப்பினாள்.
அதே நேரத்தில் ஊரில் இருந்து திரும்பி கலையரசியை காண வந்த சொக்கன் இந்த சம்பாஷணையை தூரத்தில் இருந்து பார்க்கிறான். தன் காதலி தனக்காக காத்திருப்பதை கண்டதில் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுகிறது. இன்னும் என்ன சொல்கிறாள் என மறைந்திருந்து பார்கிறான். தோழியை தூது அனுப்பியவுடன் தனிமையில் நின்றவளின் அழகை பருகுகிறான்.
அப்போது அவளை ஒரு கரம் பற்றுகிறது. திரும்பி பார்த்தவளுக்கு அதிர்ச்சி. கிராம முக்கியஸ்தர்களில் ஒருவன் அவள் கையை பிடித்த வண்ணம் குரூரமாக சிரிக்கிறான். தள்ளாடினான் மது அருந்தியதன் விளைவாக.