(Reading time: 36 - 71 minutes)

கிளாசிக் சிறுகதை - காதறாக் கள்ளன் - கல்கி

Katharaa Kallan

முன்னுரை

சில ஆண்டுகளுக்கு முன்னால் திசையெல்லாம் புகழும் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். (மாவட்டம் என்பது ஜில்லாவுக்கு நல்ல தமிழ் வார்த்தை. தமிழ் வளர்த்த திருநெல்வேலியாதலால் 'மாவட்டம்' என்ற சொல்லை போட்டு வைத்தேன்) சாலைகள் வெகு மனோரம்யமாகயிருந்தன. வழியில் தோன்றிய ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு குன்றும் ஒவ்வொரு கால்வாயும் ஒவ்வொரு ரஸமான கதை சொல்லும் எனத் தோன்றிற்று. ஆனால் ஊரில் காற்றெனக் கடுகிச் சென்று கொண்டிருக்கையில் கதை கேட்பதற்கு நேரம் எங்கே?

நல்ல வேளையாக, சிற்றாறு ஒன்று எதிர்ப்பட்டது. அதற்குப் பாலம் கிடையாது. நதியில் இறங்கித்தான் போக வேண்டும். டிரைவர் சிற்றாற்றின் கரையில் வண்டியை நிறுத்தினான். அங்கே ஒரு விசாலமான மருத மரத்தின் அடியில் முறுக்கு வடையும், வெற்றிலை பாக்கும் விற்கும் ஒரு பெண் பிள்ளை தம் கூடைக் கடையுடன் உட்கார்ந்திருந்தாள். அந்தப் பெண் பிள்ளைக்குப் பக்கத்தில் ஒரு பெரியவர் வீற்றிருந்தார். அவருடைய பெரிய மீசை நரைத்திருந்த போதிலும் நன்றாக முறுக்கிவிடப்பட்டிருந்தது. அவர் அப்பெண் பிள்ளையிடம் முறுக்கு வாங்கிக் கையினால் அரைத்துத் தூளாக்கி அதை வாயில் போட்டுக் கொண்டிருந்தார். காரில் இருந்தபடியே எங்களில் ஒருவர், "ஏன் ஐயா, ஆற்றில் தண்ணீர் அதிகமா? கார் போகுமா?" என்று கேட்டார். அதற்குப் பெரியவர், "தண்ணீர் கொஞ்சந்தான்; முழங்காலுக்குக் கூட வராது" என்றார்.

இதைக் கேட்ட டிரைவர் வண்டியை ஆற்றில் இறக்கினான். பெரியவர் சொன்னது சரிதான். தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருந்தது. ஆகையால் கார் சுலபமாகத் தண்ணீரைக் கடந்து போய்விட்டது. ஆனால் தண்ணீருக்கு அப்பால் நெடுந்தூரம் பரந்து கிடந்த மணலை காரினால் தாண்ட முடியவில்லை. சில அடி தூரம் போனதும் காரின் சக்கரங்கள் மணலிலேயே நன்றாய்ப் புதைந்து விட்டன. காரின் விசைகளை டிரைவர் என்னவெல்லாமோ செய்து பார்த்தான். பயங்கரமான சத்தங்கள் உண்டாயின. மணலும் புகையும் கலந்து பறந்தன. முதலில் சிறிது நேரம் சக்கரங்கள் இருந்த இடத்திலேயே சுழன்றன. அப்புறம் சுழலவும் மறுத்துவிட்டுப் பூரண வேலை நிறுத்தம் செய்தன. வண்டிக்குள் இருந்தவர்கள் இறங்கி வெளியே வந்தோம். எங்களாலேதான் வண்டி நகரவில்லை என்று நினைத்தானோ என்னமோ டிரைவர் நாங்கள் இறங்கியதும் மறுபடி ஒரு முறை பிரயத்தனம் செய்தான். அதுவும் பலிக்கவில்லை.

பிறகு டிரைவரும் காரிலிருந்து கீழே இறங்கினான். சிறிது நேரம் காரைச் சுற்றிப் பிரதட்சணம் வந்தோம். எங்களில் ஒரு ஹாஸ்யக்காரர் காருக்கு முன்னால் நின்று கன்னத்தில் போட்டுக் கொண்டு "அப்பா! காரப்பா! சரணம்! சரணம்!" என்றார். அதனாலும் அந்தக் கார் அசைந்துக் கொடுக்கவில்லை.

வெயிலில் சுடுகிற மணலில் என்னால் நிற்க முடியாது என்று நான் கோபமாய் சொல்லிவிட்டு ஆற்றின் தண்ணீரைத் திரும்ப காலினால் நடந்தே கடந்து கரைக்கு வந்தேன். மருத மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்த பெரியவர் பக்கத்தில் சென்று மேல் துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தேன்.

"ஏன் ஐயா! இப்படிச் செய்யலாமா? கார் ஆற்றைக் கடக்காது என்று சொல்ல வேண்டாமா?" என்றேன்.

"அழகாயிருக்கிறது! தண்ணீர் முழங்கால் வரை கூட வராது என்று சொன்னேன். அப்படியேயிருந்ததா, இல்லையா? உங்கள் ஓட்டை மோட்டார் மணலிலே போகாது என்பது எனக்கு எப்படித் தெரியும்? நல்ல கதை! காதறாக் கள்ளன் மரகதவல்லியைக் குதிரையிலே ஏற்றிக் கொண்டு வந்ததனாலே தப்பிப் பிழைத்தான்! உங்கள் மாதிரி மோட்டார் காரிலே வந்திருந்தால் அகப்பட்டுக் கொண்டு விழித்திருப்பான்!" என்றார்.

நான் அப்போது அடைந்த குதூகலத்துக்கு அளவில்லை. "ஆற்று மணலில் கார் அகப்பட்டுக் கொண்டதே நல்லதாய்ப் போயிற்று; நமக்கு ஒரு நல்ல கதை கிடைக்கப் போகிறது" என்று எண்ணி உற்சாகம் அடைந்தேன்.

"அது என்ன கதை? காதறாக் கள்ளன் என்றால் யார்? அப்படி ஒரு கள்ளனா? நான் கேள்விப்பட்டதில்லையே!" என்றேன்.

"நீங்கள் கேள்விப்படாத காரியங்கள் எத்தனையோ இருக்கலாம்! அதற்கு நானா பொறுப்பாளி?" என்று சொன்னார் அந்தப் பெரியவர்.

"கோபித்துக் கொள்ளாதீர்கள்! கதையைச் சொல்லுங்கள்!" என்றேன்.

நான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அருமையான கதை ஒன்று கிடைத்தது. 'அருமையான கதை' என்று எனக்குத் தோன்றியதைத்தான் சொல்லுகிறேன். கேட்டுவிட்டு நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.